Friday, August 28, 2015

பயிர்களுக்கு 'மூடாக்கு' இடுதல்


அண்ணாச்சி....

யாருப்பா அங்க ...? ஓ... ராமசாமியா .... வாப்பா.... வா... ஆமா... என்ன ஊரே திரண்டு வந்த மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்ட...?!!

ஆமாம் அண்ணாச்சி .... நீங்க சொன்னத எல்லார்கிட்டயும் சொன்னேன். முத்தம்மாவும் களை எடுக்க போறச்ச அவளுக்கு தெரிஞ்சவங்க கிட்டெல்லாம் சொன்னா.. எல்லாருக்கும் இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க ... அதான் சொன்ன உடனே எல்லாரும் வந்துட்டாங்க. அங்க பாருங்க... நம்ம கோடி வீட்டு ஏகாம்பரம், பக்கத்து தெரு மணி அண்ணாச்சி, பலசரக்கு கடை முத்தண்ணே, நம்ம சங்கர வாத்தியார் பையன் செல்வம், அவன் வீட்டுக்காரி, இன்னும் அஞ்சாறு பேரு வந்திருக்கோம்.... 

அடேங்கப்பா.உண்மைலே புல்லரிக்குப்பா... இத்தனை பேருக்கு இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு ஆர்வம் வந்திருக்கிறது. நல்ல மாற்றம்தான். என்னப்பா.. சரி. நாம விசயத்துக்கு வருவோம்... டேய், முருகா.., ராமசாமி உன்கிட்ட எல்லாம் சொல்லித்தான் கூப்டு வந்திருப்பான். அதனால இன்னைக்கு, 'மூடாக்கு' அப்படிங்கறத பத்தி சொல்றேன். 
இயற்கை விவசாயத்துல மூடாக்கு அப்படிங்கறது ஒரு முக்கியமான பங்கு. இப்ப நீ பயிர் போடுறப்ப, அதிக தொந்தரவு கொடுக்குறது, பயிர்களுக்கு நடுவுல வளர களைதான, அது பயிருக்கும் கேடு கொடுக்கும், நமக்கும் அதிக வேலை கொடுக்கும், அத எடுக்கணும் அப்படிங்கறதுக்கு அதிகமா செலவையும் கொடுக்கும். இந்த செலவ குறைக்கணும், நம்ம வேலைய குறைக்கணும் அப்படிங்கிறதுக்கு இந்த மூடாக்கு நமக்கு உதவுது....
ஏய்... ராமசாமி., பாத்துக்க... இன்னொரு செலவ குறைக்க போறேன்.

அண்ணாச்சி... இன்னும் கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன் ...

சொல்றேன். மூடாக்கு அப்படிங்கறது பல முறைகள் இருக்கு... முக்கியமா தேவையான சிலது மட்டும் சொல்றேன்.
  • மண் மூடாக்கு.
  • இலை, தழை மூடாக்கு.
  • உயிர் மூடாக்கு.
இதுல மண் மூடாக்கு அப்படிங்கறது, கோடை நேரத்துல நம்ம நிலத்துல செய்ற கோடை உழவு. இதனால மண்ணோட மேல் மட்டம் மூடாக்கா செயல்பட்டு, மண்ணுல இருக்குற ஈரப்பதத்த காப்பாத்துது. அதுபோக, கோடை மழை பெய்யும்போது அந்த மழை நீரை சேமிக்கவும் செய்து.



அடுத்தால, இலை, தழை மூடாக்கு போடுறது பத்தி சொல்றேன். நாம வயல்கள்ள பயிர் செய்யும் போது பொதுவா பாத்தி கட்டித்தான் செய்வோம். அப்படி செய்யாம, மேட்டுபாத்தி முறையில நிலத்த அமைச்சி, பயிர் செய்யும் போது மேட்டுப்பாத்தியில் நடவு செய்வோம். அப்படி நடவு செஞ்சு, ஒரு மாசத்துல பயிர் நல்லா வளர ஆரம்பிக்கும். அப்போ, மேட்டுப்பாத்தியில் பயிர்களுக்கு இடையில் காய்ந்த இலை, தழை, சருகு, வைக்கோல் இதுமாதிரியானதை மூடாக்கா போடணும். இது மூணு இஞ்சு உயரத்துக்கு இருக்கணும். மூடாக்கை தாண்டி வளரக்கூடிய ஒரு சில களைசெடிகளை நம்ம கையாலே புடுங்கி போட்டுறனும்.
இந்த மூடாக்கு, களை வளராம இருக்குறதுக்கு அப்படின்னு மட்டுமில்லாம, தண்ணீர் சிக்கனமும் இதன் மூலமா பாத்துக்கலாம். எப்படின்னா., ஒவ்வொரு மேட்டுப்பாத்திக்கும் இடையில் தண்ணீர் பாச்சுரதுக்கு வாய்க்கால் அமைப்போம். அப்படித்தான. இப்போ, ஒரு மாதத்துக்கு எல்லா வாய்க்கால்களிலும் தண்ணீர் சீராக பாய்ச்சனும். அதுக்கப்புறம், ஒரு வாய்க்கால் விட்டு ஒரு வாய்க்கால் அப்படிங்கற மாதிரி தண்ணீர் பாய்ச்சனும். அப்படி தண்ணீர் பாய்ச்சாத வாய்க்கால்ல மூடாக்கு போட்டுறனும். இதுல தண்ணீர் செலவு பாதியா மிச்சப்படுது.
அடுத்தால, நாம பாச்சுற தண்ணியில அறுபது சதவீதம் வீணா ஆவியாத்தான் போகுது, ஆனா, நாம போடுற இந்த மூடாக்கால, தண்ணீர் ஆவியாகி போறது ரொம்ப குறைஞ்சிருது. இப்படி இரண்டு வகையில தண்ணீர் செலவ நாம மிச்சப்படுத்திக்கலாம். இதனால கொஞ்சம் கூடுதலான இடத்துல விவசாயம் பாத்துக்கலாம்.
சரி. அப்புறம், மூடாக்கு போடுறதால, மண்ணுல தொடர்ந்து ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும், இப்படி ஈரப்பதம் இருக்குறதால, நிலத்துல மண்புழுக்களும் அதிகமா உருவாகுது. இதனால பயிர்களுக்கு நெறைய நன்மைகள் கிடைச்சிபோயிருது.

நம்ம நிலத்துலதான் மண்புழுக்களே பாத்தது இல்லையே, இதுக்காக நான் என்கியாவது போயி புடிச்சிட்டா வரணும்...?

அதான் நீங்க ரசாயன உரத்த கொட்டி, விஷத்த தெளிச்சி, மண்புழுக்களையும், நுண்ணுயிரிகளையும்..., ஏன், நெலத்தை கூட கொன்னுட்டிகளே... நீங்க வெளிய இருந்து புடிச்சிலாம் கொண்டு வரவேண்டாம். அது தானாவே வரும். எப்படின்னா, நாம ஏற்கனவே நிலத்தில அமிர்த கரைசல் பாய்ச்சிட்டு இருக்கோம்லா, அந்த வாசத்துக்கு பூமிக்கு அடியில உள்ள மண் புழுக்கள் எல்லாமே மேல ஓடி வந்துரும். அப்படி ஓடி வர மண்புழுவை திரும்ப திரும்ப வர வைக்கிற சூழ்நிலை இந்த மூடாக்கு போடுறதால கிடைக்கும். இன்னொரு விஷயம் என்னன்னா, மன்புழுக்களுக்கு இருட்டான சூழ்நிலை ரொம்ப புடிக்கும். மூடாக்கு போடுறதால, இருட்டா இருக்குமா, மண்புழுக்களுக்கு அந்த நிலம் ரொம்ப புடிச்சிபோயிரும். நாம ஏற்கனவே அமிர்த கரைசலை நிலத்துக்கு பாச்சுரதாலயும், மூடாக்கு போடுறதாலயும் குறிப்பிட்ட நாளிலேயே மண்புழுவோட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சிடும். ஒரு சதுர அடியில நாலு மண்புழுக்கள் இருந்தா, ஒரு எக்டேருக்கு இரண்டு லட்சம் மண்புழுக்கள் இருக்கும்.

மண்புழுக்கள் வரதால நமக்கு என்ன பயன் அண்ணாச்சி...?

நம்ம நிலம் வெப்பமா இருக்குறதால, இந்த மண்புழுக்கள் ஐந்து அடி ஆழத்துல, சும்மா கம்ம்னு உக்காந்துருக்கும். மூடாக்கு போடும்போது, நிலம் ஈரப்பதமா இருக்கும். இப்படி ஈரப்பதமா இருக்குறதால, அது எல்லாமே மேல எந்திச்சி வரும். மேல வரும் போது மண்ணை சாப்பிட்டுட்டே வரும். மேல வந்து, எச்சத்தை கொட்டிட்டு போயிரும். திரும்பவும் கீழ போகும். மறுபடி மேல வரும். இப்படி நாள் முழுதும் மேலயும் கீழயும் போயிட்டும், வந்துட்டுதான் இருக்கும்.


அது மேலயும் கீழயும் போறதுனால நமக்கு என்ன லாபம் அண்ணாச்சி...?

அவ்வளவு மண்புழுக்களும், மேலயும் கீழயும் போயிட்டு வந்தா, நம்ம நிலத்துல ஓட்டைகள் அதிகமாகி காற்றோட்டம் ஏற்படுது. நிலமும் பொலபொலப்பு தன்மை ஆகிரும். இதனால நாம பாச்சுற தண்ணீர, மண்ணு நல்லா உறிஞ்சி வச்சிக்கிடும். மழை பெய்யும் போது மழைத்தண்ணி எல்லாமே நிலத்த விட்டு வெளிய வீணா போகாம, நிலத்துக்குள்ளேயே இலகுவா போயிடும். இதனால நிலத்தடி நீரும் கூடிரும். இதுபோக, மண்ணுல ஈரப்பதமும், காற்றோட்டமும் நல்லா இருக்குறதால, நுண்ணுயிரிகள் வேலை செய்து, நாம போடுற மூடாக்கை சீக்கிரமே மக்க வைக்குது. இந்த மக்கின் மூலம் பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்குது. மண்புழுக்கள் மேல வந்து அதோட எச்சத்தை போடுதுன்னு சொன்னேன்ல, அந்த எச்சம் கூட நம்ம பயிர்களுக்கு மிக சிறந்த உரம். அதனால மண்புழு உரம் வெளியில பணம் கொடுத்து வாங்கி நிலத்துக்கு போட வேண்டிய அவசியமில்லை. இதுவரைக்கும் உங்களுக்கு புரிஞ்சிதா...? புரியலைன்னா அப்புறமா வந்து சந்தேகம் கேளுங்க. சொல்றேன்.

ஆமாம் அண்ணாச்சி... புரிஞ்சுது. அப்புறம், இதனால வேற ஏதும் பயிருக்கு நன்மை இருக்குமா அண்ணாச்சி..?

இருக்கு. இப்ப நான் சொல்ல போறத நல்லா கவனிங்க. ஒரு செடி, தான் வளரதுக்கு தேவையான தண்ணீர வேர்களின் மூலம் நேரிடையாக எடுக்காது. காற்றும் ஈரப்பதமும் கலந்த மூலக்கூறுகளாகத்தான் எடுக்கும். இந்த தன்மை மூடாக்கு மூலமாதான் கிடைக்கும். ஈரப்பதமா நிலம் இருக்குறதாலயும், மண்ணுக்குள்ள காற்றோட்டம் இருக்குறதாலயும்தான் இந்த செயல் நடக்கும். தேங்கி நிற்கும் அளவுக்கு நீரை அதிகமாக பாய்ச்சினால் இந்த செயல் நடக்காது. நுண்ணுயிரிகளும் வேலை செய்யாது. பயிர்களுக்கு தேவையான சத்துக்களும் அங்கே கிடைக்காது. செடிகளில் உள்ள பூக்களும், பிஞ்சிகளும் உதிர ஆரம்பிச்சிடும். செடிகளோட வளர்ச்சியும் இதனால தடை பட்டு போயிடும்.

மூடாக்குல இன்னொரு வகை உண்டு. அதுக்கு பேரு உயிர் மூடாக்கு.
நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிருக்கேன், பயிருக்குத் தேவையான தழைச்சத்தும் இயற்கையா காற்று மூலமாவே பயிருக்கு கிடைச்சிடுது. நீங்கதான் தேவை இல்லாம தழைச்சத்துக்குன்னு சொல்லி ரசாயன உரம் போட்டு காசை வீணாக்கிட்டு இருக்கீங்க. இந்த இயற்கையாவே காத்துல இருக்குற சத்துக்களை மண்ணுக்குள்ள கொண்டுபோய் சேர்க்கக்கூடிய சக்தி இரு வித்திலை தாவரம் அப்படின்னு சொல்லக்கூடிய பருப்பு வகை தாவரத்துக்கு உண்டு.  அதாவது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை இந்த மாதிரி எல்லா பருப்பு வகை தாவரத்துக்கு அந்த சக்தி உண்டு. அதனால இந்த மாதிரியான பயிர்களை ஊடு பயிரா போடணும். அப்படி செய்யரதால அது நம்மோட பயிர்களுக்கு தேவையான தழைச்சத்துக்களை காத்துல இருந்து எடுத்து மண்ணுல சேத்துக்கிடுது. இந்த ஊடு பயிர்கள் மூலமா கூடுதலான வருமானமும் நமக்கு கிடைச்சிடுது. இது போக நான் ஏற்கனவே சொல்லிருந்த மாதிரி, அமிர்த கரைசல் கரைக்கிரதுக்கு தேவைப்படுற மாவை நாம வெளிய காசு கொடுத்து வாங்காம ஊடு பயிரோட தானியத்துல இருந்து எடுத்துக்கலாம்.  என்ன வள்ளியம்மா, நான் சொல்றது உனக்கும் புரியுதுல்லா?

புரியுது அண்ணாச்சி ...

ஆமா புரியுதுன்னு சொல்லிட்டு தலையாட்டிட்டு அப்புறம் தலைய சொரிஞ்சிட்டு நிக்காத. எல்லாரும் நல்லா கவனிங்க... உங்களுக்கு சந்தேகம் அப்படிங்கறது இப்ப வராது, வேலைய ஆரம்பிக்கும் போதுதான் அதிகமா சந்தேகம் வரும். யாருன்னாலும், எப்பன்னாலும் என்கிட்டே உங்க சந்தேகத்த கேட்டுக்கலாம். போன்ல எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க. உடனே அது எப்படி என்ன யாதுன்னு உங்க சந்தேகத்த தீர்த்து வச்சிடுறேன். அடுத்ததா உங்களுக்கு பயிர் பாதுகாப்பு முறைகளை பத்தி சொல்ல போறேன். இதுவும் உங்க செலவ குறைக்கிரதுல முக்கியமான பங்கு இருக்கு. நீங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு சாயுங்காலம் வாரீங்களா?

சரிங்க அண்ணாச்சி.... உங்க கிட்ட பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல்ல. நாங்க போயிட்டு வந்துடுறோம் அண்ணாச்சி....

Share this

Artikel Terkait

0 Comment to "பயிர்களுக்கு 'மூடாக்கு' இடுதல் "

Post a Comment