Monday, August 24, 2015

வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பது எப்படி?

சென்ற பதிவில் வர்த்தக ரீதியாக விவசாய நிலத்தில்
கீரைத்தோட்டம் பயிரிடுவது பற்றி பார்த்தோம்.
இந்த பதிவில் வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பு பற்றி கூறுகிறேன்.

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ,மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு அல்லது மூன்றுஅடி  அகலத்தில், தேவையான நீளத்திற்கோ) சிறு சிறு மேட்டுப்பாத்திகளாக (தரையிலிருந்து சுமார் அரை அடி உயரத்தில்) அமைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் விருப்பத்திற்கிணங்க இதில் நீங்கள், தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்ற ரகங்களில் எதனை வேண்டுமானாலும் பயிரிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு ரகங்களையும் பயிரிடலாம்.



கீரைத்தோட்டத்தை சுற்றிலும் வரப்பு ஓரங்களில் அகத்திகீரை செடிகள்  நடவும். பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி செடியின் விதைகளை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

கீரைத்தோட்டத்தின் வெளிப்புறம் சுற்றிலும் சாமாந்திப்பூ செடியினை பயிரிடுங்கள் (இது பூச்சிகளை கீரை பயிரிட்ட பாத்திகளுக்குள் வரவிடாமல் தடுத்து வேலி போல் செயல்படும்).

கீரை விதைகளை சலித்த மணலுடன் கலந்து, பாத்திகளின் மேல் சீராக தூவி விடவும். பின்னர் கைகளால், மேல் மண்ணை மூடிவிடவும். பூவாளி கொண்டு தண்ணீரை பாத்திகளின் மீது மெதுவாக தெளிக்கவும்.

மூன்றாம் நாள் மீண்டும் பாத்திகளில் நீர் தெளித்து விடவும். ஒரு வாரம் கழித்து, கீரைகள் முளைத்து வந்திருக்கும். கூடவே ஒரு சில களைகளும் முளைத்திருக்கும். தேவையில்லாமல் முளைத்திருக்கும் அவ்வகை களைகளை கைகளால் பறித்து அகற்றிவிடவும். தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து, நீர் தெளித்து வரவும். இருபத்தி ஐந்து நாள் முதல் முப்பது நாட்களுக்குள் கீரைகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

வெந்தயக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. அறுவடைக்குப்பின் விதைகளை  மீண்டும் தூவி பயிர் செய்திடலாம். மற்ற கீரை ரகங்களை, இருபத்தி ஐந்து நாள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்து வரலாம். (பத்து மாதங்கள் கழித்து தோட்டம் முழுதும் சுத்தப்படுத்தி, மீண்டும் இதே போல் விதைகள் விதைத்து அறுவடை செய்து வரலாம்).

அமிர்தக்கரைசல் பற்றியும், தயாரிப்பு முறைகள் பற்றியும் ஏற்கனவே நமது பதிவில் பதிவிட்டுள்ளோம். அப்படி தயார் செய்திட்ட அமிர்தக்கரைசலை பூவாளியால் தண்ணீரை பயிருக்கு பாய்ச்சும் போது, பத்து லிட்டர் தண்ணீருக்கு ஐநூறு மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து விடவும். இது மட்டுமே போதும். வளர்ச்சி ஊக்கிக்காக வேறு உரமோ, டானிக்கோ கீரைகளுக்குத் தேவையில்லை. தேவையில்லாமல் அதிகமாக செலவு செய்ய வேண்டாம்.

அமிர்தக்கரைசல் தயாரிக்க இடுபொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அல்லது தயாரிக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள், E.M.(Effective Micro Organism) கரைசலை தயாரித்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதைத்தயாரிப்பது என்பது, மிகவும் எளிதான ஒன்று. அது எப்படி என்பதைத்தொடர்ந்து காண்போம்.

E.M. கரைசல் தயாரிக்கும் முறை :

  1. கனிந்த நாட்டு வாழைப்பழம்                       - 1 கிலோ
  2. பரங்கிபழம்                                                           - 1 கிலோ
  3. பப்பாளிப்பழம்                                                     - 1 கிலோ
  4. நாட்டுச்சக்கரை (உருண்டை வெல்லம்) - 1 கிலோ
  5. நாட்டுக்கோழி முட்டை                                  - 1 எண்ணம்


மூடியுடன் கூடிய ஒரு சிறிய பிளாஸ்டிக் பேரல் எடுத்துக்கொள்ளவும். முதலில் கூறிய பழங்கள் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில்  போடவும். நாட்டுச்சர்க்கரையை நன்றாக பொடி செய்து அதையும் சேர்த்துக்கொள்ளவும். நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஓட்டுடன் உள்ளே போடவும். இவை அனைத்தும் மூழ்கும் அளவுக்கு பேரலில் தண்ணீர் ஊற்றி, அதன் பின், காற்றுப்புகாதவாறு பேரலை இறுக்கமாக மூடி விடவும். கண்டிப்பாக கலக்குதல் கூடாது. இவ்வாறு நாம் தயாரித்த கரைசலை சூரிய ஒளி படாதவாறு நிழற்பாங்கான இடத்தினில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். முப்பது நாட்கள் கழித்த பின்பு மூடியை திறந்து பார்க்கவும். உள்ளே கரைசலின் மேலே வெண்மை நிற படலம் ஒன்று இருக்கும். இதுதான் நாம் தயாரித்த கரைசல் நன்றாக வந்திருக்கிறது என்பதற்கான சான்று. அப்படி வெண் படலம் வரவில்லை என்றால், கால்கிலோ நாட்டுச்ச்சக்கரையை பொடி செய்து, மீண்டும் அந்த கரைசலுடன் சேர்த்து பேரலை மூடிவிடவும். இப்படி மூடிய பின் அதிலிருந்து பதினைந்து நாள் கழித்து கரைசலை எடுத்து பயன்படுத்தலாம். தேவையான அளவு கரைசலை மட்டும் எடுத்து, வடிகட்டி பயன் படுத்தவும் .மீண்டும் பேரலை நன்றாக மூடி விடவும். இந்த கரைசலை 300 மி லி. அளவு எடுத்து, பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து பூவாளி மூலம் பாசனம் செய்யலாம். இது மண்ணில் கலந்து நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெருக்கி, பயிருக்குத்தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும். இலைகளின் மீது படுவதனால்செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.  வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

பூச்சிகள் வண்டுகள் தென்பட்டால் மட்டும், மூலிகை பூச்சி விரட்டியை தெளிக்கவும். அது தயாரிக்கும் முறையையும் இப்போது பார்ப்போம்.

மூலிகை பூச்சி விரட்டி :
இஞ்சி, பூண்டு, மிளகாய் - சம அளவு எடுத்து, தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.பின் இவை மூன்றையும் கலந்து கொண்டு, அதை ஓர் இரவு முழுதும் வைத்திருத்தல் வேண்டும். பின்பு அதனை துணியால் வடிகட்டி, 500 மில்லி அளவிற்கு, 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து இலைகளின் மேல் நன்றாக தெளித்துவிட வேண்டும்.

குறிப்பு: தோட்டத்தில் நீங்கள் பயிரிட்டிருக்கும், காய்கறி செடிகள் மற்றும் அனைத்து விதமான பயிருக்கும், இந்தக்கரைசல்கள் இரண்டையும் பயன்படுத்தலாம். இயற்கை முறையிலேயே பயிரிட்டு, ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்து, மண் வளத்தையும், நம் உடல் நலத்தையும் செம்மையாக வைத்திருப்போம்.

Share this

Artikel Terkait

0 Comment to "வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பது எப்படி?"

Post a Comment