Wednesday, September 16, 2015

தினம் ஒரு கீரையில் இன்று... பசலைக்கீரை...!

பசலைக்கீரை

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறந்த நிவாரணி பசலைக்கீரையாகும். மஞ்சள் காமாலையால் உடல் மெலிந்தவர்கள் பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். மேலும், மலக்கட்டு சீர் செய்யும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும்.

பசலைக்கீரையை வதக்கி வீக்கம், கட்டி போன்றவற்றின் மேல் வைத்து கட்டி வர, கட்டி உடைந்து புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு. சீழ் பிடித்து நீண்ட நாள் ஆறாமல் புண்கள் இருந்தாலும் அதையும் இக்கீரையை கொண்டு கட்டி வர, உடனடியாக ஆற்றிவிடும் தன்மை இதற்கு உண்டு.

பாசி பருப்பு, துவரம் பருப்பு இவைகளுடன் கீரையை சேர்த்து சாப்பிட்டு வருவோர்க்கு பித்தம் தணியும், நீர்த்தாரை சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் நோய்கள், சீதபேதி, போன்ற நோய்கள் குணமாகும். மிளகு, சீரகம், பூண்டு இவற்றுடன் சேர்ந்து இக்கீரையை உண்டு வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும். மார்பு வலி நீங்கும்.

தாது விருத்திக்கான கீரை இது. போகத்தை தூண்டி இல்லறம் சிறக்க பசலைக்கீரையை உண்டு வந்தால் போதும். சக்தி கிடைக்கும். குளிர்ச்சி அதிகமாக தரக்கூடிய கீரை.

பசலைக்கீரையை சூப் செய்து சாப்பிடும் முறையைப்பற்றி கூறுகிறேன். இதற்கு பசலைக்கீரை கட்டு ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். காய்கறிகள் சிலவற்றை மூன்று கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் ஆட்டா மாவு, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், மூன்று கப் பால், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது இதன் செய்முறையைப்பற்றி கூறுகிறேன். எடுத்துக்கொண்ட காய்கறிகளையும், பசலைக்கீரையையும் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பை அதனுடன் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பால், வெண்ணெய், மாவு ஆகியவற்றை நன்றாக கலந்து, தனியாக இதையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து, பின்னர் நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள கீரை காய்கறிகளை பால் வெண்ணெய், மாவுடன் சேர்த்து மீண்டும் பத்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். சூப் ரெடி. சாப்பிட நீங்களும் ரெடிதானே..?


Share this

Artikel Terkait

0 Comment to "தினம் ஒரு கீரையில் இன்று... பசலைக்கீரை...!"

Post a Comment