Saturday, September 26, 2015

உணவுபொருட்களை நாமே தயார் செய்து கொள்வது எப்படி? இன்று நல்லெண்ணெய்...

'வைத்தியனுக்கு கொடுக்கிறத வாணியனுக்கு கொடு' இப்படி ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் வைத்தியனிடம் போகாமல் நம்மள நாமே பாதுகாத்துக்கலாம் இல்லையா? நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப யோசிக்கவே செய்யணும். நம்ம உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், உடம்புக்கு வெளியே இருந்தாலும் சரி, உள்ள இருந்தாலும் சரி நாம உபயோகிக்கிற பொருள் நூறு சதவீதம் ஆரோக்கியமானதுதானா? சுத்தமானதுதானா? உடலுக்கு ஏற்றதுதானா? அப்படின்னு யோசிச்சி யாருமே பொருட்களை வாங்குறதும் இல்லை, உபயோகிக்கிறதும் இல்லை. இதுதான் உண்மை. அது பெரிய 'பிராண்டட்' கம்பெனி பொருளா இருந்தாலும் சரி. தொலைகாட்சி பெட்டியில விளம்பரம் செய்ற கம்பனிகளா இருந்தாலும் சரி. கண்டிப்பா அதுல ஆரோக்கிய கேடான விசயங்கள் இருக்கத்தான் செய்யும்.

அப்போ என்ன செய்ய? எப்படின்னுனாலும் பொருள்கள் வாங்கித்தான ஆக வேண்டி இருக்கு. அப்படிங்கறீங்களா? சரிதான். கடைகள்ள வாங்க கூடிய அந்த பொருட்கள வீட்டுல நம்ம கண்ணு முன்னால நாமளே செய்து உபயோகப்படுத்தினா.. "அப்படி நாம செய்ய முடியுமா..? அதுக்கு பெரிய பெரிய இயந்திரம்லாம் வேணுமே..."அப்படிங்கற முனுமுனுப்பெல்லாம் வேண்டாம். எளிய முறைகள்ள குறைந்த செலவில நீங்களே இலகுவா தயாரிக்கிற மாதிரி சொல்லிக்கொடுக்க நான் தயாரா இருக்கேன். அப்படிப்பட்ட சில பொருட்கள பத்தி நாம இந்த கட்டுரைகள்ல இனி தொடர்ந்து பார்ப்போம்.

அந்த வகையில இன்னைக்கு எள்எண்ணை தயாரிப்பது எப்படின்னு சொல்றேன். எள்எண்ணை அப்படின்னா நல்லெண்ணெய் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும். எல்லா எண்ணை பெயர்களுமே அதனது விதைகள் பெயரை தாங்கியே வரும். அப்படி இருக்க எள்எண்ணையை மட்டும் கூறும் போது நல்லெண்ணெய் என்பார்கள். இந்த எண்ணையை உபயோகிப்பதால் உடலுக்கு எந்தவிதமான தீமைகளும் கொடுக்காமல் நன்மையை மட்டுமே செய்வதால் இதற்கு நல்ல எண்ணை என்றார்கள். (இப்போது கடைகளில் வாங்கும் நல்லெண்ணைக்கு இது பொருந்தாது).

பலசரக்கு கடைகள்ள அல்லது எள் பயிர் செய்கிற விவசாயிகளிடமோ குறைந்தபட்சம் 20 கிலோ எள் வாங்கி, அதை தூசி இருந்தால் சுத்தப்படுத்தி, 2 நாள் வெயிலில் காய வைத்து விடுங்கள். இந்த அளவு எள்ளுக்கு ஒரு கிலோ கருப்பட்டி என எடுத்துக்கொண்டு, அதனை எண்ணை அரைக்கிற மில்லுக்கு கொண்டு செல்லுங்கள். எல்லா ஊர்களிலும் எண்ணை அரைக்கிற மில் இருக்கும். சில இடங்கள்ள அரிசி அரைக்கிற மில்லோட சேத்து வச்சிருப்பாங்க. அப்படி இல்லைன்னா உங்க ஊர் ரைஸ் மில் காரர்ட்ட கேட்டா அது எங்க இருக்குன்னு சொல்லிடுவாங்க. அப்படி ஒரு மில்ல தேர்ந்தேடுத்துக்கோங்க. அதுல கொண்டு போயி இந்த எள், கருப்பட்டியை கொடுத்து அரைத்து அதிலிருந்து கிடைக்கும் எண்ணையை வாங்கிக்கொள்ளுங்கள். இதற்கு அவர்கள் குறைந்த பட்ச கூலியே கேட்பார்கள்.

அரைத்து கிடைத்த எண்ணையை வீட்டிற்கு கொண்டு வந்து, ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி ஒரு சிறிய துண்டு கருப்பட்டியை அதனுடன் போட்டு சில்வர் பாத்திரத்தின் வாய் பகுதியை வெள்ளைத்துணியால் வேடு கட்டிக்கொள்ளுங்கள். அதை இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து விடுங்கள். மூன்றாம் நாள் நமக்குத்தேவையான சுத்தமான எண்ணை நன்றாக தெளிந்து இருக்கும். இப்போது அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு எள் வாங்கிக்கொண்டீர்களோ அதில் நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து சதவீதம் எண்ணை கிடைக்கும். அதாவது, 20 கிலோ எள்ளுக்கு 8 முதல் 9 கிலோ எண்ணை கிடைக்கும். இது நம் கண் முன்னாலே நாமளே தயாரித்த ஆரோக்கியமான எண்ணை. இதற்கென செலவும் அதிகம் கிடையாது. கிட்டத்தட்ட நீங்கள் வெளியில் வாங்கும் எண்ணையின் செலவுத்தொகையே இதற்கும் ஆகும். ஆனால் மருத்துவ செலவு மிச்சமாகும் என்பது உண்மை. இதை மாதம் ஒருமுறை வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் நாம் தயாரித்த இந்த நல்லெண்ணெய்.

இப்படி 'இரும்பு இயந்திரத்தில்' வைத்து எண்ணை அரைத்து எடுப்பது என்பது சிறப்பு. எண்ணையை ;கல் செக்கில்' வைத்து எடுப்பது என்பது மிக சிறப்பு. சில இடங்களில் 'மர செக்கு' இருக்கும். அதில் அரைத்து எடுப்பது என்பது மிக மிக சிறப்பு. ஏன் சொல்கிறேன் என்றால், இரும்பு இயந்திரத்தில் அரைத்து எடுக்கும் போது அதிக உஷ்ணத்தில் அரைக்கப்படும். கல் செக்கில் என்றால் அதை விட குறைவான உஷ்ணத்திலும் அதுவே மர செக்கில் எனும் போது மிக மிக குறைவான உஷ்ணத்திலும் அரைக்கப்படுகிறது. உஷ்ணம் அதிகமாக அதிகமாக எண்ணையில் இருக்கும் உயிர்ச்சத்துக்கள் குறைந்து போகும். கடைகளில் கிடைக்கும் எண்ணை, அதை தயாரிப்பவர்கள் பெரிய இயந்திரத்தில் வைத்து மிக மிக அதிக உஷ்ணத்தில் தயாரிக்கிறார்கள். எனவே, அதில் உயிர் சத்துக்கள் என்பது சுத்தமாக இருக்காது. மேலும் ரீபைண்டு என்ற பெயரில் அதில் உள்ள பிற சத்துக்களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள். நாம் அதை உபயோகபடுத்தினால் நமக்கு எந்த லாபமும் இருக்காதுதானே. ஆகவே இதை ஒப்பிடும் போது, நாம் தயாரித்த எண்ணை ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

மர செக்கு, கல் செக்கு, இயந்திர செக்கு
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், கடைகளில் எள் வாங்கும்போது எண்ணை தயாரிக்க என்று கேட்டு வாங்குங்கள். ஏனென்றால் சில எள் பொக்கு எள்ளாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட எள்ளை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். வாங்கிய எள்ளை கண்டிப்பாக வெயிலில் 2 நாட்கள் காயப்போட வேண்டும். எண்ணை எடுத்த பின்னரும் எண்ணையை 2 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட ஒருவரால் இது முடியவில்லை என்றால், அப்பகுதியில் இருக்கும் ஒருவர் தேவையான நபர்களுக்கு இதனை செய்து கொடுத்து சிறிதளவு வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். தயவு செய்து இதை ஒரு சேவையாக செய்யவும்.

சரி. இதை உபயோகப்படுத்துவதால் நமக்கு என்னென்ன பயன் என்று பார்க்கலாம்.
காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர், இருபத்தைந்து மில்லி எண்ணையை வாயில் ஊற்றி இருபது நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க வேண்டும். வாயில் இருக்கும் எண்ணையானது தனது வழுவழுப்பு தன்மை நீர்த்துப்போய், நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும். அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படி செய்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி சரி செய்யப்படும். இது ஒரு சர்வ ரோக நிவாரணி ஆகும். இதை ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் உபயோகிப்படுத்தி வந்தது. இப்போது ஆயில் புல்லிங் என்ற பெயரில் பிரபலமாகிக்கொண்டு வருகிறது.

வாரம் ஒருமுறை எண்ணையை தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய்கள் ஏற்படாது. தோல் மினுமினுப்புடன் இருக்கும். உடலில் உஷ்ணம் தணிந்து உள் உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.

எண்ணை தேய்த்து குளிக்கும் போது அதனுடன் சிறிதளவு வெங்காயம், சீரகம், ஐந்து மிளகு, சிறிதளவு நைத்த இஞ்சி துண்டு சேர்த்து சூடு படுத்தி ஆறிய பின்னர் உடல் முழுதும் நன்றாக தேய்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் புதுப்பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்கும். நம் முன்னோர்கள் இம்முறையை பயன்படுத்திதான் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருந்ததாக கூறுவார்கள்.

அதிகமான கால்சியம் சத்து இதில் உள்ளது என்பதால் கால்சிய சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் நேரிடையாக குடிப்பதால் அந்த குறைபாடு நீங்கும்.

பெண்களுக்கு கால்சிய சத்து குறைபாட்டினால் எலும்புகள் பலவீனமடையும். அவர்கள் தினமும் சிறிதளவு நேரிடையாக குடித்து வந்தால் இதெற்கென எந்த மருத்துவமும் தேவை இல்லை.

வளரும் இளம் குழந்தைகளுக்கு தினமும் சிறிதளவு நல்லெண்ணெயை குடிக்க கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு தன்மையுடன் வளர்வார்கள்.
சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் வர விடாது.

உடலில் வலி ஏற்பட்ட இடத்தினில் நல்லெண்ணையை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.

சிலருக்கு அதிக உஷ்ணத்தால் அடி வயிறு வலி, சிறு நீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப்பகுதியில் எண்ணையை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

இப்போது தெரிகிறதா, வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என்ற பழமொழியின் அர்த்தம். கொஞ்சம் மெனக்கெட்டு நம்ம ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள்ல கவனம் செலுத்தி,நாம மட்டும் இல்லாம நம்ம சந்ததிகளையும் ஆரோக்கியமாக வளர்ப்போம். மீண்டும் ஆரோக்கியமான இன்னொரு தயாரிப்பு முறையில் சந்திப்போம். 

Tuesday, September 22, 2015

தினம் ஒரு கீரையில் இன்று கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை

அட.. என்ன ஒரு மணம்...! இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே..! ஒரு மிதிவண்டியில அந்த கீரைய கொண்டுட்டு போனா அந்த தெருவே அப்படி ஒரு மணமா இருக்கும்ல..? அப்படிப்பட்ட இந்த கீரைய சமையலுக்கு உபயோகிக்காத வீடே இல்லைன்னு சொல்லலாம். கடையில எந்த ஒரு சமையலுக்கும் காய்கறி வாங்க போகும்போது அத இலவசமா கொஞ்சம் போலயாவது வாங்கிட்டு வந்துரனும் நமக்கு. அப்படி நெருக்கமான கீரை இந்த கொத்தமல்லி கீரை.

வாசம் என்பது மட்டுமின்றி,  இதனுடைய பயன்களும் அதிகம். அதைப்பற்றி இப்போது பார்ப்போம். ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி, விக்கலை தடுக்கிறது. ஆண்மை குறைவை நீக்குகிறது. பைத்தியம் தணிக்கிறது. சிறுநீரை பெருக்குகிறது. இதில் விட்டமின் 'A' சத்து உள்ளதால், கண் பார்வை தெளிவாகிறது. விட்டமின் 'C' சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளது என்பதால், உடலில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது. எலும்பு, பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்தும் இதில் இருக்கிறது. நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி, வாய்க்கசப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அவர்கள் இந்தக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.

சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் கீரை 50 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து புண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.

ரத்த சோகை உள்ளவர்கள் கீரையுடன், உளுந்தம் பருப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். ரத்த சோகை அதிகமானால், மஞ்சள் காமாலை நோயில் கொண்டுபோய் நம்மை தள்ளிவிடும். தொடர்ந்து இதை சாப்பிட்டு வருபவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம்.

பற்களில் ரத்தம் கசிவு, வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிதளவு கொத்தமல்லி கீரையை எடுத்து பச்சையாக அப்படியே மென்று, சிறிது நேரம் வாயில் வைத்திருந்து பின்னர் வெளியில் துப்பிவிடுங்கள், பின் வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும். இப்படி தொடர்ந்து இருபது நாட்கள் செய்து வர, அந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பாற்றல் நம் உடலில் அதிகரிக்க, கொத்தமல்லி இலைகளுடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன்  கற்கண்டு அல்லது தேன் கலந்து தீனீராக்கி (காப்பி, டீ இவற்றுக்குப்பதிலாக) காலை மாலை வேளைகளில் குடித்து வரலாம். மது போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி பித்தம் தலைக்கேறியவர்கள் இந்த தீனீரை குடித்து வந்தால் படிப்படியாக பித்தம் தணியும்.


Sunday, September 20, 2015

காலத்திற்கேற்ப உண்ணக்கூடிய கீரை வகைகள்

நமது நண்பர்களில் சிலர் கீரைகளை குளிர் காலத்தில் சேர்த்துக்கொள்ளலாமா? வெயில் காலத்தில் சேர்த்துக்கொள்வது நல்லதா? இந்தகீரைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? இந்த கீரையை இந்த நோய் தாக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாமா? என்பது மாதிரியான சந்தேகங்களை கேட்டுகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த பதிவினை இப்போது தருகிறேன். இதன் படி நீங்கள் கீரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் (பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை) சாப்பிடும் கீரைகள் பற்றி முதலில் பார்ப்போம்.

  • வல்லாரைக்கீரை
  • பசலைக்கீரை
  • வெந்தயக்கீரை
  • சக்ரவர்த்தி கீரை
  • பசலைக்கீரை
  • கரிசலாங்கண்ணி கீரை
  • மணத்தக்காளி கீரை
  • தண்டுக்கீரை 
  • அகத்திக்கீரை (மாதம் இருமுறை மட்டுமே)


மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் (புரட்டாசி மாதம் முதல் மாசி மாதம் வரை) சாப்பிட ஏற்ற கீரைகள்.
  • கற்பூரவள்ளி
  • அரைக்கீரை
  • முசுமுசுக்கை
  • தூதுவளை
  • மூக்கிரட்டை
  • புதினா
  • சுக்கான்கீரை


வருடம் முழுதும் சாப்பிட தகுந்த கீரைகளும் உள்ளன. அவை:

  • வல்லாரைக்கீரை
  • முருங்கைக்கீரை
  • புளிச்சக்கீரை
  • அரைக்கீரை
  • பொன்னாங்கண்ணி கீரை


குழந்தைகளுக்கு இப்படிபட்ட கீரைகள் கொடுக்கலாம்.

  • தூதுவளை
  • மூக்கிரட்டை
  • முருங்கை
  • கற்பூரவள்ளி
  • அரைக்கீரை
  • வல்லாரைக்கீரை


உடலின் உறுப்புகளை காக்கும் கீரைகள்:

  • தாம்பத்திய உறவு சிறக்க.
  • வல்லாரைக்கீரை
  • பசலைக்கீரை
  • முருங்கைக்கீரை
  • தூதுவளைக்கீரை
  • பசலைக்கீரை
  • புளிச்சக்கீரை


தோல்களை மென்மையாக்கும் கீரைகள்:

  • பருப்புக்கீரை
  • சுக்கான் கீரை
  • பொன்னாங்கண்ணி கீரை


மூளைக்கு வலு சேர்க்கும் கீரைகள்:

  • வல்லாரைக்கீரை
  • முருங்கைக்கீரை


கல்லீரலை பாதுகாக்கும் கீரைகள்:

  • கீழாநெல்லி
  • கரிசலாங்கண்ணி


குடலைப்பாதுகாக்கும் கீரை:

  • மணத்தக்காளி கீரை


நரம்பு மண்டலத்தை சீராக்க உதவும் கீரைகள்:

  • தூதுவளை
  • புளிச்சக்கீரை
  • கொத்தமல்லிக்கீரை


கண்களின் பார்வை தெளிவுடன் இருக்க உதவும் கீரைகள்:

  • முருங்கைக்கீரை
  • கருவேப்பிலை
  • பொன்னாங்கண்ணி
  • கொத்தமல்லி கீரை


மூட்டுவலி போக்கும் கீரைகள்:

  • முடக்கறுத்தான் கீரை
  • கருவேப்பிலை


கீரை உண்பதை தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி பார்ப்போமானால்,
சிறுநீரக கற்கள், பித்தப்பையில் கற்கள், கருப்பைக்கட்டி, உள்ளவர்கள் பொதுவாக கீரை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமா நோயாளிகள் அதிக குளிர்ச்சியை தரக்கூடிய வெந்தயக்கீரை, மணத்தக்காளி, முளைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளவே கூடாது. அதற்குப்பதிலாக, கருவேப்பிலை, கற்பூர வள்ளி, முசுமுசுக்கை, தூதுவளை, புதினா போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நரம்புத்தளர்ச்சி மற்றும் தாம்பத்திய குறைபாடுகள் கொண்டவர்கள் முருங்கைக்கீரை, தூதுவளை கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை ஆகிய கீரைகளை பருப்பு, மிளகு, சீரகம், நெய் போன்றவை சேர்த்து உண்டு வர நிவாரணம் கிடைக்கும்.

இரவு நேரத்தில் கீரைகளை உணவில் சேர்க்கக்கூடாது என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் எல்லோருக்கும் அது பொருந்தாது. அதாவது,
செரிமானக் கோளாறு உள்ளவர்கள், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், தீராத வியாதி உள்ளவர்கள், குழந்தைகள் இரவில் தாமதமாக உணவு உண்பவர்கள் இவர்களைத்தவிர்த்து மற்றவர்கள் இரவில் கீரைகளை எடுத்துக்கொள்வது தவறில்லை.

Saturday, September 19, 2015

தினம் ஒரு கீரையில் இன்று மணத்தக்காளி கீரை...!

மணத்தக்காளி கீரை

மிளகு தக்காளி, சுக்கட்டிக்கீரை, கருஞ்சுக்கட்டி ... இந்த பெயர்களை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா...? இவையெல்லாம் மணத்தக்காளி கீரையின் மற்ற பெயர்களே...

இந்த செடியினை அதிகம் பேர் பார்த்திருப்பீர்கள். குட்டித்தக்காளி, குட்டை தக்காளி, குறுந்தக்காளி என்று கிராமங்களில் கூறி அதைப்பார்த்தும் பார்க்காதது போல் போய் இருந்தீப்பீர்கள். இதில் அப்படி என்ன சத்துக்கள் இருக்கப்போகிறது என்று நீங்கள் கேட்பது போல் இருக்கிறது. மணத்தக்காளி கீரை என்றாலே இன்னும் சிலருக்கு தெரிவது, அது வயிற்றுபுண்களை ஆற்றக்கூடியது என்று. அது போக இன்னும் அதிகமான சத்துக்கள் அதில் உள்ளது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், புரதச்சத்து, மாவுப்பொருட்கள்... இப்படி அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் இக்கீரை பயன்படுகிறது.

இந்தக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், குடல் புண், வாய்ப்புண், பால்வினை நோய்கள், உடல் உஷ்ணம், கர்ப்பப்பை கோளாறுகள், மலச்சிக்கல், காமாலை, தலைவலி போன்ற நோய்களை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்த மூல நோயை குணப்படுத்துகிறது. உடலில் தேமல், ரத்தக்கட்டிகள், கொப்பளங்கள் போன்றவற்றையும் நீக்குகிறது.

இந்தக்கீரையை பருப்புடன் சமைத்து உண்பது நல்லது. கீரையை புழுங்கல் அரிசி கழு நீரில் அவித்து, சமைத்தால் மிகுந்த நன்மையைத்தரும். இறைச்சி உண்ணும் நாட்களில் இந்தக்கீரை உண்பதைத்தவிர்ப்பது நல்லது. இக்கீரையின் சாறெடுத்து அதை வாயில் இட்டு சிறிது நேரம் கழித்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றமும் இல்லாமல் போய் விடும். வயிற்றுப்புண்களால் அவதிப்படுவோர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கீரை சாற்றினை ஒரு அவுன்ஸ் வீதம் சுமார் பத்து நாட்கள் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

இந்தப்பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை பலமடைந்து அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டு வருவதால் வாயில் ஏற்பட்ட ரணம், உடலில் ஏற்பட்ட சூடு, வாத வீக்கங்கள், குடல் புண்கள் ஆறும். வயிற்றுப்பூச்சிகளை கொள்ளும்.

மொத்தத்தில் மணத்தக்காளி செடியின் வேர் முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. எந்த வகையிலாவது மணத்தக்காளியை உணவுடன் சேர்த்து கொள்வது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயமாகும்.

Wednesday, September 16, 2015

தினம் ஒரு கீரையில் இன்று... பசலைக்கீரை...!

பசலைக்கீரை

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறந்த நிவாரணி பசலைக்கீரையாகும். மஞ்சள் காமாலையால் உடல் மெலிந்தவர்கள் பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். மேலும், மலக்கட்டு சீர் செய்யும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும்.

பசலைக்கீரையை வதக்கி வீக்கம், கட்டி போன்றவற்றின் மேல் வைத்து கட்டி வர, கட்டி உடைந்து புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு. சீழ் பிடித்து நீண்ட நாள் ஆறாமல் புண்கள் இருந்தாலும் அதையும் இக்கீரையை கொண்டு கட்டி வர, உடனடியாக ஆற்றிவிடும் தன்மை இதற்கு உண்டு.

பாசி பருப்பு, துவரம் பருப்பு இவைகளுடன் கீரையை சேர்த்து சாப்பிட்டு வருவோர்க்கு பித்தம் தணியும், நீர்த்தாரை சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் நோய்கள், சீதபேதி, போன்ற நோய்கள் குணமாகும். மிளகு, சீரகம், பூண்டு இவற்றுடன் சேர்ந்து இக்கீரையை உண்டு வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும். மார்பு வலி நீங்கும்.

தாது விருத்திக்கான கீரை இது. போகத்தை தூண்டி இல்லறம் சிறக்க பசலைக்கீரையை உண்டு வந்தால் போதும். சக்தி கிடைக்கும். குளிர்ச்சி அதிகமாக தரக்கூடிய கீரை.

பசலைக்கீரையை சூப் செய்து சாப்பிடும் முறையைப்பற்றி கூறுகிறேன். இதற்கு பசலைக்கீரை கட்டு ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். காய்கறிகள் சிலவற்றை மூன்று கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் ஆட்டா மாவு, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், மூன்று கப் பால், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது இதன் செய்முறையைப்பற்றி கூறுகிறேன். எடுத்துக்கொண்ட காய்கறிகளையும், பசலைக்கீரையையும் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பை அதனுடன் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பால், வெண்ணெய், மாவு ஆகியவற்றை நன்றாக கலந்து, தனியாக இதையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து, பின்னர் நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள கீரை காய்கறிகளை பால் வெண்ணெய், மாவுடன் சேர்த்து மீண்டும் பத்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். சூப் ரெடி. சாப்பிட நீங்களும் ரெடிதானே..?


Saturday, September 12, 2015

தினம் ஒரு கீரையில் இன்று வல்லாரைக்கீரை ...!

வல்லாரைக்கீரை

சரஸ்வதி கீரை,யோசனை வல்லி என்று சொல்லப்படும் இக்கீரையில் இரும்புச்சத்து, மனிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் மிகுதியாக உள்ளது. இந்த கீரையினை பறித்து அப்படியே பச்சையாக தினமும் காலையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை விருத்தியாகும். ஞாபக சக்தி அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். 'வல்லாரை வெல்ல வல்லாரை உண்க' இது பழமொழி. அதாவது, வல்லவர்களை வெல்ல வேண்டுமென்றால் வல்லாரை சாப்பிடவும். வல்லாரையை சாப்பிட்டால், மூளை பலம் பெரும். வல்லவர்களை வெல்லலாம். எனவே இதை சரஸ்வதி கீரை என்று சொல்வதில் தவறில்லையே...!

இதை சாப்பிட்டு வருவோர்க்கு உடல் அரிப்பு, உடல் தடிப்பு, நரம்பு வலி, சிரங்கு, சூலைப்பிடிப்பு, அண்ட வாய்வு, அண்ட வீக்கம் சூதக கோளாறு போன்றவை நீங்கும். காய்ச்சல், தொண்டைக்கட்டு, சிறுநீர் ஒழுக்கு சீர் செய்யப்படும். இது காயகல்ப மூலிகையாகும். நம் முன்னோர்கள் ஆயுள் விருத்திக்கென இதை சாப்பிட்டு வந்தனர்.

தலை முதல் கால் வரை வரக்கூடிய எல்லா வகை நோய்களுக்கும் இது மருந்தாவதால் இதை சர்வ ரோக நிவாரணி என்றும் அழைப்பர். சரும நோய், மூட்டு வலி, வயிற்றுப்புண், கை கால் வீக்கம் உள்ளவர்கள் இக்கீரையை மாதக்கணக்கில் சாப்பிட்டு வர நோயின் தாக்கம் குறைவதை உணரலாம்.

வல்லாரைக்கீரையின் பயன்கள் பற்றி பார்த்தாயிற்று. இப்போது இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதைப்பற்றியும் பார்ப்போம். இக்கீரையானது சந்தையிலோ, கடைகளிலோ பச்சைக்கீரைகளாக கிடைப்பது அரிது. பச்சைக்கீரைகள் கிடைத்தால் மற்ற கீரைகளைப்போல், மிளகு, பூண்டு, பாசிப்பயிறு, தேங்காய் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். மேலும், கீரைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதில் 200 கிராம் அளவு எடுத்து, அதோடு மிளகு, கொத்தமல்லி, ஏல அரிசி இவை மூன்றையும் தலா 5 கிராம் எடுத்து, வல்லாரை பொடியோடு கலந்து, ஒரு டீஸ்பூன் அளவு பொடிக்கு ஒரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு கலந்து தீநீர் (சூப்) செய்து தினமும் சாப்பிட்டு வரலாம். அல்லது இப்பொடியினை தேனுடன் கலந்தும் சாப்பிட்டு வரலாம். பச்சைக்கீரைகள் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் வல்லாரை பொடியினை வாங்கி மேலே சொன்னவாறு சாப்பிட்டு வரலாம்.

வளரும் குழந்தைகள், நினைவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்கள், வாய்ப்பேச்சில் தடுமாறும் பிள்ளைகள் போன்றோர்கள் இந்த வல்லாரைகீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்புடன் செயல்பட்டு அவர்கள் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கும். மூளையையே மூலதனமாக வைத்து தொழில் செய்யும் ஆடிட்டர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்றோர்களுக்கும் இக்கீரை ஒரு வரப்பிரசாதமே...


Friday, September 11, 2015

தினம் ஒரு கீரையில் இன்று அகத்திக்கீரை ...!

அகத்திக்கீரை

அகம் + தீ + இலை = அகத்திஇலை.
அகத்தில் (உடலில் அல்லது மனத்தில்) உள்ள தீயை இல்லாமல் செய்யாமல் செய்யக்கூடியது.

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சிய சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் 'ஏ' சத்தும் இதில் மிகுதியாக உள்ளது.

பெண்களுக்கு உடல் பலகீனத்தால் எலும்புகலானது பாதிப்படையும். பெண்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து எலும்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை வளர்க்கக்கூடியது அகத்திக்கீரை. உடலில் உண்டாகும் கெட்ட நீரினை வெளியேற்றுகிறது. குடலில் தேங்கும் நிணநீர், மலங்கள் ஆகிய அசுத்தங்களை சுத்தம் செய்து வெளியேற்றவும் உதவுகிறது. உணவில் உள்ள விஷத்தன்மையை நீக்கும். நாக்கு பூச்சிகள் ஒழியும். வாய்ப்புண் ஏற்படாது. வாய் துர்நாற்றம் போக்கக்கூடியது. வியர்வை நாற்றம் நீக்கும்.

காப்பி, டீ அதிகமாக சாப்பிட்டு அதனால் பித்தம் அதிகமானவர்கள் வாரம் ஒருமுறை உணவுடன் அகத்திக்கீரை சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

குடும்பத்தில் பாசத்தின் மிகுதியால் கொடுக்கப்படும் இடுமருந்துகளின் தன்மையை முறிப்பதற்கு அகத்திக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது. இடுமருந்து சாப்பிட்டு இருப்பது உறுதியாக தெரியுமானால் தினம் அதிகாலையில் ஒரு கைப்பிடி அளவு கீரையை சாறு எடுத்து குடிக்கவும். பின்னர் வாரம் ஒருமுறை சாறை தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளித்து வர இடுமருந்தினால் உண்டான மனக்கலக்கம், சித்த பிரம்மை, பயம், பயித்தியம் படிப்படியாக குறையும்.

அகத்திக்கீரையை சூப் செய்து பார்க்கலாமா..? கீரையை சுத்தப்படுத்தி, தேவையான அளவு தண்ணீர் வாணலியில் இட்டு, தண்ணீர் கொதித்த உடன் சுத்தப்படுத்திய கீரையை அதில் போட்டு, சாம்பார் வெங்காயம், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்து வந்த பின்னர் அதை சில நிமிடங்கள் ஆறவைத்து, வடிகட்டி அப்படியே சூப்பாகா சாப்பிடலாம். அதில் இருக்கும் வெங்காயத்தினையும் அப்படியே சாப்பிட்டுக்கொள்ளலாம். சூப்பரான சூப் என்று உங்கள் குழந்தைகளும் கூறுவார்கள். பாருங்களேன்.

அகத்திக்கீரை யார் யார் எடுக்கவேண்டும்? எப்போது உட்கொள்ள வேண்டும் என்பது பற்றியான ஒரு முக்கிய தகவலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையினை தொடக்கூடாது.
குடிப்பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த கீரையினை சாப்பிடக்கூடாது.
தினசரி உணவோடு சேர்த்து சாபிட்டால் உடலில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். 


Tuesday, September 8, 2015

தினம் ஒரு கீரை ...!

முருங்கைக்கீரை

இன்று நம் பதிவில் முருங்கைக்கீரையைப்பற்றியும் அதோட பயன்கள் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிரலாம் என்று இருக்கிறேன்.

முருங்கை மரமானது, ரத்த விருத்தியையும், தாது விருத்தியையும் உண்டாக்கக்கூடியது என்பதால் இது பிரம்மாவின் அம்சம் என கருதப்படுகிறது. முருங்கையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் 'சி', வைட்டமின் 'ஏ' சத்து அடங்கியுள்ளது. மேலும், வைட்டமின் 'பி' சத்தின் அம்சமான தயாமின், ரைபோபிளேவின் மற்றும் நிகோடினிக் அமிலம் இதில் அடங்கியுள்ளது.

உங்களுக்கு பசி எடுக்கிறதா? வீட்டில் சாப்பிட டிபன் சாப்பாடு என எதுவும் இல்லையா? உடனடியாக உங்கள் பசி அடங்க - முருங்கைக்கீரையை வதக்கி சாப்பிட்டு, சிறிதளவு மோர் குடித்தால் போதும், சில நிமிடங்களில் உங்கள் வயிறு கப்,சிப் ஆகிவிடும்.

உங்கள் உடல் வலிமைக்கும், மனோதிடத்தை கொடுப்பதற்கும் முருங்கைக்கீரையை நெய் அல்லது நல்லெண்ணெய் உடன் சேர்த்து வதக்கி சீரகம், வெங்காயம், பூண்டு, மிளகு இவைகளையும் சேர்த்து பொரியல் போல சாப்பிட்டு வந்தால் ஏழு வையான தாது சத்துக்களும் உடலில் சேர்ந்துவிடும். இந்த பொரியல் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கூட உடலில் இருந்து ஓடிப்போய்விடும்.எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அருமருந்து.

இன்னும் சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும். அவங்க நான் இப்ப சொல்ற மாதிரி செஞ்சிட்டு வாங்க, அதாவது, முற்றிய முருங்கை இலை சாறு ஒரு அவுன்சு எடுத்து, காலைல வெறும் வயித்துல குடிச்சிட்டு வாங்க. இப்படி குடிச்சிட்டு வந்தீங்க அப்படின்னா, ரத்த அழுத்தம் குறைஞ்சிட்டு வரது மட்டும் இல்லாம, ரத்தத்துல இருக்குற கொழுப்பும் குறையும்.

உயிர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் வேற எந்த மாத்திரை மருந்தும் சாப்பிட வேண்டாங்க. முருங்கைப்பூவை கொஞ்சம் எடுத்து பசும்பாலில் போட்டுக்காய்ச்சி அதுகூட இனிப்புக்காக பனங்கற்கண்டும் சேர்த்து தினமும் ராத்திரி குடிச்சிட்டு வந்தீங்க அப்படின்னா, உயிர்ச்சத்து அதிகமாகும்.

முருங்கைப்பிசின் 10 கிராம், பாதாம் பருப்பு 5 எண்ணம் கூடவே கசகசா அரை ஸ்பூன் சேர்த்து, இத 12 மணி நேரம் தண்ணியில ஊறவச்சி அதுக்கப்புறம் அம்மியில அரைச்சி, இத காய்ச்சுன பாலோட கலந்து குடிச்சிட்டு வந்தீங்கன்னா, தாது கெட்டியாகி, பலப்பட்டு வரும். உங்க மேனி கூட பொலிவா இருக்கும்.

காலைல மட்டும்தான் உங்களுக்கு பால் குடிக்கிறதுக்கு வசதி இருக்கா, அதுக்கு ஒரு வழி முறை இருக்கு. அதையும் சொல்றேன். முருங்கை விதையில் உள்ள பருப்பை எடுத்து, அதோட பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு தலா பத்து கிராம் வீதம் எடுத்து, பால் விட்டு அரைச்சி, ஒரு டம்ளர் காய்ச்சின பால்ல கலந்து கூடவே பனங்கற்கண்டும் கலந்து தினம் காலைல குடிச்சிட்டு வந்தீங்கன்னாலும் உங்க தாது பலமாகும்.

முருங்கை பிஞ்சு கூட ஒரு சத்து மிகுந்த ஊட்ட உணவுதான். இதை சாப்போட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்க அப்படின்னா, இளைத்த உடல் தேறும். கண் சம்மந்தப்பட்ட நோய் நீங்கும். பார்வை பலப்படும், முடி உதிர்வை தடுக்கும். மூட்டு வலி, மலக்கட்டு, குடல் வறட்சி, வாய் துர்நாற்றம் இல்லாம போய்விடும். சூதகக்கட்டு நீங்கும், தாய்ப்பால் பெருகச்செய்யும்.

முருங்கைப்பூ, காய், இலை மூன்றையும் பருப்போடு சேர்த்து கூட்டு வைத்து, சாப்பிட்டு வாங்க. ரொம்ப ருசியாக இருக்கும். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இத வீட்டுல நீங்களும் செஞ்சு பாருங்களேன். பிரமாதம் அப்படின்னு சொல்லுவீங்க.

முருங்கை இலையை நெய் விட்டு லேசா வதக்கி தோசை விடும் போது, தோசைக்கு மேல தூவி, சாப்பிட்டு பாருங்க. அருமை. அருமை....

நெய் உருக்கும் போது, முருங்கை இலையை போட்டு உருக்குவதை கிராமத்தில் இன்னைக்கும் பாக்கலாம். இது ஏன் அப்படின்னா, நெய் நீண்ட நாள் கெட்டும் போகாது. வாசனையும் பிரம்மாதமா இருக்கும்.

இத விட இன்னொரு ஆச்சரியமான விஷயம், நமக்கு தெரியாத விஷயம் என்னன்னா, முருங்கைப்பொடி டன் கணக்குல வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுது. ஆமா, நமக்குத்தெரியாத விஷயத்த வெளிநாட்டுக்காரன் உபயோகிக்கிறான் பாருங்க. இவ்வளவுக்கும் நம்ம பக்கத்துலதான் முருங்கை மரம் அதிகமா இருக்கு. ஆனா நாம அதப்பத்தியே தெரியாம இருக்கோம். முத்தின முருங்கை இலைகள எடுத்து நிழல்ல காயப்போட்டு, அத இடித்து, பருத்தி துணியில நல்ல சலித்து எடுத்துக்கோங்க. இத தினம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மோர்ல கலந்து குடிச்சிட்டு வந்தோம்னா, முருங்கை மரத்தோட சத்துக்கள் நேரடியாவே நமக்கு கிடைக்கும்.


Friday, September 4, 2015

மூலிகை பூச்சி விரட்டி

வணக்கம் அண்ணாச்சி ....! வாங்க.. வாங்க..!

ஏ... குமாரு .... வாப்பா. வா... என்ன, நான் வரதுக்கு முன்னாடியே நீங்க எல்லாரும் என் வீட்டுல வந்து நிக்கீங்க போலிருக்கு... வாங்க... வாங்க... எல்லாரும் வாங்க.... ஏ... மரியாதையெல்லாம் வேண்டாம்பா.. உக்காருங்க.. உக்காருங்க... அப்படியே உக்காருங்க....

சரிங்க அண்ணாச்சி.... நீங்க வேணா உள்ளார போயி காலு கை கழுவிட்டு வாங்க. நாங்க காத்திருக்கோம்.

அதுக்கென்னப்பா.. அதான் இங்க தொட்டியிலேயே தண்ணி வச்சிருக்கேனே.. இப்படியே அலம்பிட்டு உக்காருதேன்... ம்ம்ம்.. சரி.. நான் உங்களுக்கு இப்ப எத பத்தி சொல்லுறேன்னு சொன்னேன்....

அண்ணாச்சி... பூச்சிகள வெரட்டதுக்கு ஏதோ மூலிகைல செஞ்சி வெரட்டணும்னு சொன்னீங்களே .... அதெல்லாம் நம்ம பயிருக்கு தேவையா அண்ணாச்சி... அதான் ஏற்கனவே முக்கால்வாசி பூச்சிங்கள கொன்னுட்டோம்னு சொன்னீங்கள்ள.., அப்புறம் எதுக்கு....? கடையில ஏதாவது மருந்தை வாங்கி, நீங்க சொன்ன மாதிரி அந்த மிச்சம் இருக்குற பூச்சிகளையும் கொன்னுரலாம்லா..? கொஞ்சம் இருக்குற பூச்சிய கொல்ல கொஞ்சம் மருந்து வாங்குனா போதும்.. செலவு மிச்சம் ஆகும்லா அண்ணாச்சி...

போடா பொசக்கெட்ட பயல... என்ன பேசுத..? நீங்கல்லாம் இப்ப பூச்சி வெரட்டுரதுக்குன்னு சொல்லி ரசாயன பூச்சி கொல்லி பயன்படுத்துறீங்களே... அதனால பூச்சி மட்டுமா சாவுது.. நம்ம பயிரும்லா கூட சேந்து நஞ்சா போயிருது... அந்த நஞ்சான தானியத்ததான நாமளும் சாப்பிடுதோம். இதனால நம்ம உடம்பும்தான் நஞ்சா போயிருதே... இதனால பாதிப்பு உடனடியா இல்லாட்டாலும் நம்மள கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டேதான் இருக்கும்பா. உயிர்க்கொல்லி நோயான நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய் அப்புறம் புற்றுநோய் இதெல்லாமே நமக்கு தெரியாமலே நமக்குள்ளே வந்துட்டு இருக்கும். இன்னொன்னு தெரியுமாடா... நம்ம உடம்புல இந்த நஞ்சி சேந்ததால புள்ளைக்கு கொடுக்குற தாய்ப்பால் கூட நஞ்சாத்தான் இருக்குன்னு இப்ப ஆராய்ச்சில கண்டுபுடிச்சிருக்காங்க. ஏன்டா... உனக்கு அடுத்தால வளர்ற தலைமுறைய கூட நஞ்சாதான் வளக்கனுமா...? போதும்பா.... பழயபடி யாருக்கும் பாதிப்ப கொடுக்காத நம்மளோட பாரம்பரியதுக்கே போவோம்பா...

அண்ணாச்சி அவன் கிடக்கான் அண்ணாச்சி... நீங்க சொல்லுங்க...

சரி. இப்ப கவனமா கேட்டுக்கோங்க. இத பயன்படுத்துறது ரொம்ப சுலபம். யாருக்கும் எதுக்கும் பாதிப்பே கிடையாது. இந்த மூலிகை பூச்சி வெரட்டி ரெண்டு வகைல நாம தயாரிக்கனும்.
முதல் முறை:
நொச்சி இலை                       - 1 கிலோ
எருக்கன் இலை                   - 1 கிலோ
சோத்துகத்தாலை சோறு - 1 கிலோ
வேப்ப முத்து                         - 1 கிலோ
ஆடாதொடை இலை         - 1 கிலோ
இதை எல்லாத்தையும் தனித்தனியா உரல்ல இடிச்சி சாறு எடுக்கணும். இதுல இருந்து 7 கிலோ சாறு நமக்கு கிடைக்கும். இந்த சாறை 100 லிட்டர் தண்ணில கலந்து தெளிக்கணும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. உங்க இடத்த பொறுத்து உங்களுக்கு தேவையானத கூட குறைச்சி போட்டு செஞ்சிக்கோங்க. இன்னொரு விஷயம், இத இருப்பு வச்சி உபயோகிக்கக்கூடாது.. தேவையான நேரத்துல தயார் செஞ்சி உடனே உபயோகிச்சிரனும். சரியா..?
இன்னொரு முறை என்னன்னா,
நாட்டு பூண்டு                      - 1 கிலோ
பச்சை மிளகாய்                 - 1/2 கிலோ
இஞ்சி                                      - 1/2 கிலோ
புகையிலை                          - 1/2 கிலோ
வேப்பங்கொட்டை சாறு - 200 மில்லி
மண்ணெண்ணெய்            - 100 மில்லி
காதி சோப்பு (300 கிராம்)   - 1 எண்ணம்
முத நாள் ராத்திரி 3 லிட்டர் தண்ணிய எடுத்து, அத நல்லா கொதிக்க வச்சி, அதுல புகையிலைய உள்ள போட்டு, அப்படியே தனியா எடுத்து வச்சிருங்க. அடுத்தால, வெள்ளப்பூடை அரைச்சி, மண்ணெண்ணெய் கூட சேந்து கலந்து அதையும் தனியா எடுத்து வச்சிருங்க. மறுநாள் காலைல, வேப்பங்கொட்டை சாறையும், காதி சோப்பையும் ஒரு அரை லிட்டர் தண்ணி எடுத்து அதுல போட்டு நல்லா கரைக்கணும். இப்ப மீதி இருக்குறது எது..? பச்சை மிளகாயும், இஞ்சியும்... இதையும் அரைச்சி தனியா எடுத்து வச்சிருங்க. அடுத்தால, நாம முத நாள் ராத்திரி புகையிலை போட்டு தண்ணி சேத்து வச்சிருந்தோம்ல, அது .., அப்புறம் அந்த பூண்டு கரைசல்.., காலைல சேத்த சோப்புக்கரைசல், இப்ப அரைச்ச இஞ்சி மிளகாய் விழுது இப்படி எல்லாத்தையும்  ஒண்ணா சேத்து, நல்லா கலக்கி, ரெண்டு தடவ நல்லா வடிகட்டி எடுத்து வச்சுக்கோங்க. அடுத்தாப்புல, இப்படி நாம தயார் பண்ணுன கரைசல, ஒரு நூறு லிட்டர் தண்ணியோட சேத்துட்டா அது நம்ம பயிர்க்கு தேவையான கரைசல் தயார். இதுதான் இயற்கை முறைல செய்யக்கூடிய பூச்சி விரட்டி. இதுவும் ஒரு ஏக்கருக்கு உண்டான அளவுதான். இப்ப நான் உங்களுக்கு ரெண்டு வகையான பூச்சி வெரட்டி சொல்லிக்கொடுத்துருக்கேன். இந்த ரெண்டு வகை கரைசலயும் பூச்சி தாக்குதலை பொறுத்து, பதினைஞ்சி நாள் இடைவேளைல பயிர்களுக்கு மாறி மாறி தெளிச்சிட்டு வரலாம். தெளிக்கும் போது இலைகள் எல்லாத்துலயும் நல்ல படும்படி நல்லா தெளிச்சிட்டு வந்துருங்க. அவ்வளவுதாம்பா.. இதுதான் மூலிகை பூச்சி விரட்டி தயார் பண்றதும், பயன் படுத்துற முறையும்.

அது சரி அண்ணாச்சி... இப்படி தெளிச்சா, பூச்சிங்க எல்லாம் செத்து போயிருமா..?

கண்டிப்பா பூச்சிங்க சாகாது....

என்ன அண்ணாச்சி சொல்லுதீக... இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பூச்சி வெரட்டிதான...?

ஆங்... அதான். பூச்சி வெரட்டிதான்... பூச்சிக்கொல்லி கிடையாது. பூச்சிங்கள வெரட்டத்தான் செய்யும். சாகடிக்காது. புரியுதா...?
அதாவது, நீங்க தெளிக்கிற இந்த கரைசல், இலைகள் மேல நல்லா படிஞ்சிருக்கும். நம்ம பூச்சி வெரட்டி கரைசல்ல உரைப்பும், கசப்பும் சேத்துருக்கோம் அப்படித்தான... இந்த வாசனை பூச்சிகள செடி மேல உக்காராம வெரட்டிரும். அதையும் மீறி பயிருக்குள்ள வந்து இலைகள கடிக்க ஆரம்பிச்சிட்டு அப்படின்னா, கரைசல்ல இருக்குற கசப்புத்தன்மை பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மைய உருவாக்கிரும். இனப்பெருக்கம் நடக்காது.
இதுதான் இயற்கை முறைல பயிரை பாதுக்காக்குற முறை. இப்படி செஞ்சா நமக்கு ஏதும் பாதிப்பு வருமா...? செலவு அதிகமா வருமா...? வரவே வராது... இனிமே நீங்க.., நான் சொன்ன மாதிரி, இப்படித்தான் செய்வீங்கன்னு எதிர்பார்கட்டுமா...?

நிச்சயமா அண்ணாச்சி... அதுக்குத்தான இவ்வளவு தூரம் வந்து இவ்ளோ நாளா இந்த நல்ல விசயத்த கேட்டுட்டு இருக்கோம்.

சரி.. இயற்கை விவசாயத்த பத்தி சொல்லிட்டேன். அதுக்கு நீங்க எனக்கு என்ன தட்சணை கொடுக்க போறீங்க...?

தட்சனையா.. என்ன அண்ணாச்சி சொல்லுதீங்க...? செலவ குறைக்கிறது எப்படின்னு சொல்லிக்கொடுத்துட்டு, ஆரம்பத்துலயே செலவோட ஆரம்பிக்கீகளே...

நான் கேக்குற தட்சணைய உங்களால கண்டிப்பா கொடுக்க முடியும்...

அப்படியா..? அப்ப சரி. கேளுங்க. முடிஞ்சா தந்துருதோம்.

நீங்க இயற்கை விவசாயம் செஞ்சி, பலன் அடைஞ்சிட்டு, இந்த முறைய எல்லாத்துக்கும் சொல்லி, அவங்களையும் இயற்கை விவசாயத்துக்கு மாத்தி கொண்டாரணும். இதுதான் எனக்கு நீங்க தர வேண்டிய தட்சணை. சரியா..? தந்துடுவீங்களா..?

கண்டிப்பா அண்ணாச்சி.... பக்கத்து ஊரு, எனக்கு தெரிஞ்சவன், தெரியாதவன் எல்லாத்துட்டேயும் சொல்லி, இப்படித்தான் வெவசாயம் பண்ணனும்னு அவங்களையும் இயற்கை வெவசாயத்துக்கே மாத்திக்காமிக்கிறோம். ஏ மாடசாமி, குமாரு, மணி.., என்ன அண்ணாச்சி சொல்ற மாதிரி நாம எல்லாரும் செஞ்சிடலாம்லா....?

செஞ்சிருவோம்... செஞ்சிருவோம்....

சரி.... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இத்தன வருஷமா நீங்க ரசாயன விவசாயம் பண்ணுனதால, நெலத்துல நுண்ணுயிரிகள் இல்லாம எல்லாமே அழிஞ்சி போயிருக்கும் இல்லியா? அதனால நுண்ணுயிரிகள நெலத்துல பெருகுறதுக்கு சில காலம் புடிக்கும். அதனால, தொடர்ந்து அமிர்தக்கரைசல நெலத்துக்கு கொடுத்துட்டே வந்தீங்க அப்படின்னா, நுண்ணுயிரிகளும் பெருகிட்டே இருக்கும். முதல்ல நீங்க, உங்க நெலத்துல, கொஞ்சம் இடத்த பிரிச்சி, அதுல இயற்கை வெவசாயம் செஞ்சி பாருங்க. அப்புறம் உங்களுக்கே தெரியும், செலவு குறையிறதும், தரமான தானியங்களோ, காய்கறிகளோ உற்பத்தி ஆகுறதும்... திருப்தியான பிறகு, முழுசா எல்லா இடத்துலயும் பயிர் பண்ண ஆரம்பிச்சிக்கோங்க...

சரிங்க அண்ணாச்சி... அப்படியே செய்றோம்...

இப்ப உங்களுக்கு எல்லாம் புரிஞ்ச மாதிரிதான் இருக்கும். நீங்க நிலத்துல இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்கும் போதுதான் நெறைய சந்தேகம்லாம் வரும். அதனால, உங்களுக்கு வருற சந்தேகத்த, அப்பப்ப என்கிட்டே கேளுங்க. நானும் சொல்லுதேன். சரி. கோயில் திருவிழா வருதுல்லா, சாமிய கும்பிட்டுட்டு நல்ல படியா இயற்கை விவசாயத்த ஆரம்பிங்க... எல்லாரும் நல்லா செழிப்பா இருங்கப்பா.. வரட்டுமா...

Wednesday, September 2, 2015

பயிர் பாதுகாப்பு

ஏ .... என்ன ராமசாமி.. சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் ஒன்னு போல வந்துட்டீங்க. பரவாயில்லைப்பா ... உங்க ஆர்வத்த பாராட்டுறேன். சரி. வாங்க. எல்லாரும் அப்படி அப்படி உக்காருங்க. டேய் மாடசாமி, தள்ளி உக்காருப்பா. அவன இடிச்சிட்டு உக்காரதேப்பா... ம்ம். சரி.

அண்ணாச்சி பயிர் பாதுகாப்பு பத்தி சொல்றேன்னு சொன்னீங்கள்ள. நீங்க சொல்ல ஆரம்பிங்க. எல்லாரும் அமைதியாகிடுவாங்க. ஆரம்பிங்க அண்ணாச்சி...

சரிப்பா. பயிர் பாதுகாப்புன்னு சொல்றோம்ல... பயிர்கள எதில இருந்து பாதுகாக்கணும்?

பூச்சிகள் கிட்ட இருந்தும், நோய்கள் கிட்ட இருந்தும்தான் பயிர்கள நாம பாதுகாக்கணும். சரியா அண்ணாச்சி?

ரொம்ப சரியா சொன்ன. இதுல, நோய்கள்கிட்ட பாதுக்காக்கிரதுக்கு உண்டான சக்தி இயற்கையாவே நம்ம பயிர்களுக்கு உண்டு. எப்படின்னா, இயற்கை விவசாயம் செய்யும்போது பயிர்கள் நிலத்துல இருந்து தேவையான சத்துக்கள எடுத்து நோய் எதிர்ப்பு சக்திகளோட ஆரோக்யமா வளருது. அதனால நோய் தாக்குதல் என்பது ரொம்ப குறையாவே இருக்கும். நல்லா பாத்துக்கோங்க, இது இயற்கை விவசாயம் செய்யும் போதுதான் இந்த சக்தி கிடைக்கும். நீங்க ரசாயன விவசாயத்துல மண்ணும் மலட்டுத்தன்மை ஆகிடும். செடியும். அதிகமா நோய்வாய் பட்டுரும். அதனால இயற்கை விவசாயத்துல நோய் பாதுகாப்பு பெரிய பிரச்சனையே இல்ல. அடுத்ததா பூச்சிகள்கிட்ட இருந்து பாதுகாக்குறது ரொம்ப அவசியம். இத நல்லா கவனமா கேட்டுக்கோங்க.



பூச்சிகளை பத்தி முதல்ல சில விசயங்கள் நான் உங்களுக்கு சொல்றேன். பூச்சிகளுக்கு வாழ்க்கை பருவங்கள் என்பது நாலு வகையா உண்டு. முட்டைப்பருவம், புழுபருவம், கூட்டுப்புழு பருவம் கடைசியா பூச்சி பருவம். அதோட வாழ்க்கை சுழற்சி அப்படிங்கறது இந்த நாலு பருவத்துலதான் இருக்கும். பயிர்ல பூச்சி இருக்குதேன்னு சொல்லி பூச்சி மருந்து அடிப்பீங்க. நீங்க அப்படி அடிச்ச பதினைஞ்சி நாளைக்கு பூச்சி தெரியாது. திரும்பவும் பாத்தா  பூச்சிகளா தெரியும். மறுபடியும் மருந்து அடிப்பீங்க. ஆனா இந்த செயல்ல நீங்க எத்தன தடவ மருந்து அடிச்சாலும் பூச்சிகள் கட்டுப்படாது. இது ஏன்னு எப்பவாவது நீங்க சிந்திச்சி பாத்தது உண்டா..? அதாவது, நாம மருந்து தெளிக்கும் போது, புழுக்கள் மேலேயும், பூச்சிகள் மேலேயும்தான் மருத்துகள் படும். இந்த இரண்டும்தான் செத்து போகும். ஆனா முட்டையும் , கூட்டுபுழுவும் இந்த மருந்துகள்கிட்ட இருந்து தப்பிச்சிடுது. இதுதான் திரும்பவும் நம்ம தோட்டத்துல பூச்சிகளா மறுபடியும் வளந்துடுது. அந்த பூச்சிகள் மறுபடியும் முட்டைகள் போடுது. நீங்க மருந்து அடிக்கீங்க. பூச்சி மட்டும் சாகுது. முட்டைகள் அப்படியே இருக்குது. இந்த சுழற்சிதான் பூச்சிகள் நம்ம தோட்டத்துல எப்பவும் இருக்குற மாதிரி இருக்குது.
சரி., இப்ப நான் இன்னொரு விஷயம் சொல்றேன். பூச்சிகள்ள நன்மை செய்யுற பூச்சி, தீமை செய்யுற பூச்சி அப்படின்னு ரெண்டு வகை உண்டு. இது யாருக்கெல்லாம் தெரியும்?

நன்மை செய்யுற பூச்சியா...? அது பாத்ததே இல்லியே அண்ணாச்சி..! அப்படி நமக்கு அது என்ன நன்மைய செஞ்சிற போகுது..?

அதாவது, தீமை செய்யுற பூச்சிகள திங்குறதுதான் இந்த நன்மை செய்யுற பூச்சிகள். அப்போ நன்மை செய்யுற பூச்சிகள் நம்ம தோட்டத்துல இருக்குறது நல்லதா? கெட்டதா? நல்லதுதான் இல்லையா? அப்போ நன்மை செய்யுற பூச்சிகள வர வைக்கணும்னா, ரசாயன மருந்துகள நாம தெளிக்காம இருக்கணும். அப்படி செஞ்சா, நன்மை செய்ற பூச்சிகளும் சேந்தே செத்து போய்டும்.

சரிதான் அண்ணாச்சி. அப்போ இந்த நன்மை செய்ற பூச்சிகள அதிகமாக்குனா இன்னும் நமக்கு நல்லதுல்லா...?

சரியா சொன்ன குமாரு. அப்படி நமக்கு நன்மை செய்ற பூச்சிகளை கண்டிப்பா அதிகமாக்கணும். அதுக்கு பயிர்களை சுத்தி ஆமணக்கு செடிகள நாம வளக்கணும். வேலி ஓரமாத்தான் வளக்கனுமே தவிர வயலுக்கு உள்ள வளக்கக்கூடாது. அதுபோக, வயலுக்கு உள்ள வரப்பு ஓரத்துல, மஞ்ச நிற பூ பூக்கக்கூடிய செடிகள வளக்கணும். உதாரணமா, சாமந்திப்பூ, துவரை இப்படிப்பட்ட செடிகள வளக்கலாம்.




ஆமணக்கு செடியும், துவர செடியும் பூச்சிகள எப்படி அண்ணாச்சி கட்டுப்படுத்தும். கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்.

பயிர்களுக்கு தீமை செய்ற பூச்சிங்க முட்டை இடும்னு சொன்னேன்லா, இப்ப, இந்த ஆமணக்கு செடிகள வேலி ஓரத்துல போடுறதால, பூச்சிங்க நம்ம தோட்டத்துல வந்து முட்டை போடாம, ஆமணக்கு செடிகளோட இலைகளிலே முட்டைகள போட்டுரும். நம்ம பயிருக்குள்ள வராது. ஆமணக்கு செடிகள்ள போட்டுருக்க முட்டைக நம்ம கண்ணுக்கு தெரியும். அதனால அந்த முட்டைகள் இருக்குற இலைகள அப்படியே பறிச்சி, முட்டை பருவத்துலயே பூச்சிகள அழிச்சிடலாம். அத மீறி வளர்ற புழுக்கள புடிச்சி சாப்பிடுரதுக்காக, நன்மை செய்ற பூச்சிகளான தேனீக்களும், குழவிகளும் நம்ம வயல தேடி ஓடிவரும். இப்படி ஓடி வரதுக்கான காரணம், நாம வளக்கக்கூடிய மஞ்ச நிற பூக்கள்தான்.

அண்ணாச்சி, இந்த மஞ்ச நிற பூக்களுக்கு பதிலா வேற நிறத்துல பூக்கக்கூடிய பூச்செடிகள போடலாம்ல..?

அதுதான் இல்லை. மஞ்ச நிறம்தான் பூச்சிகள அதிகமா
கவர்ந்து இழுக்கும். தேனீக்கள் அதிகமா வரதால, நம்ம பயிர்கள்ள மகரந்த சேர்க்கை நடந்து மகசூல் கூடுது. குழவிகள் அதிகமா வரதால, நாம அழிச்ச முட்டைகள்ள இருந்து தப்பிச்சி வந்த மத்த புழுக்கள, குழவி தன்னோட உணவுக்காகவும், தான் முட்டை இட்டு குஞ்சி பொரிக்கரதுக்காகவும் அந்த புழுக்கள தூக்கிட்டு போய்டும்.
இப்ப நம்ம பயிர்கள்ள பூச்சிகளோட தாக்குதல முக்காவாசி கட்டுப்படுத்திட்டோமா..? இதுபோக, மீதி இருக்குற பூச்சிகளையும் நாம மூலிகை பூச்சி விரட்டி மூலமா முழுசா கட்டுப்படுத்திடலாம். இவ்வளவுதாம்பா.... இதுக்கு போயி நீங்க ரசாயன உரத்தையும், பூச்சி கொல்லி விஷத்தையும் பயிர்ல தெளிச்சி, நாம சம்பாதிச்ச பணத்தையெல்லாம் உரக்கம்பெனி முதலாளிகளுக்குத்தான் கொடுத்துட்டு இருக்கோம். அவங்க கோடீஸ்வரனா இருக்காங்க. நாம கடனாளியா இருக்கோம்.

சரியா சொன்னீங்க அண்ணாச்சி.... இது எவ்வளவு சுலபமான வேல. இதனால நம்மளோட பணமும் மிச்சமாகுது. விஷம் இல்லாத உணவும் கிடைக்குது. மண்ணும் நல்ல வளமா ஆகிருதுல்லா...! அண்ணாச்சி... மிச்சம் இருக்குற பூச்சிகள, மூலிகை பூச்சி விரட்டி மூலமா வெரட்டிரலாம்னு சொன்னீங்கள்ள,  அது எப்படி தயாரிக்கணும் ? என்ன ? யாதுன்னு அதப்பத்தியும் கொஞ்சம் விவரமா சொல்லிருங்களேன் அண்ணாச்சி.

சரிப்பா... சொல்லுறேன். ஆனா எனக்கு கொஞ்சம் வயல்ல வேலை இருக்கு. நான் போயிட்டு வந்து ராத்திரி விவரமா இதப்பத்தி பேசுவோம். சரியா...? அப்போ... கிளம்ப்புவோமா...?