Thursday, February 18, 2016

காயத்துக்கு (உடலுக்கு) ஏற்ற காய்கள் - இன்று முருங்கைக்காய்

காய்கறிகளின் அரசன் முருங்கைக்காய் என்று சொல்வதுண்டு. உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகமாக தன்னகத்தே கொண்டுள்ளதால் இதை அவ்வாறு கூறுவர். முருங்கை மரத்திற்கு 'பிரம்ம விருட்சம்' என்ற பெயர் மட்டுமல்லாது 'ஏழைகளின் மரப்பயிர்' போன்ற சிறப்புப் பெயர்களும் உள்ளது.

முருங்கை மரத்தின் இலைகள், காய்கள், பிஞ்சுகள், பூக்கள், பட்டைகள், முருங்கை கோந்து அனைத்திலும் பஞ்ச பூத சக்தி மிகுந்துள்ளதால் உடலில் ஏற்படும் பல பிணிகளை நீக்க வல்லது. மனிதர்களின் உன்னத மருத்துவ பொக்கிஷம் இந்த முருங்கை மரம்.

இதனுடைய பிஞ்சுக் காய்கள் மட்டுமே சமையலுக்கு உபயோகப் படுத்துகின்றோம். அதிக அளவு கலோரி சக்தியை கொண்டுள்ளதால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இதை உண்பதன் மூலம் பயனடையலாம்.

முருங்கை காய்களை சூப்பாக பயன்படுத்தலாம். துவையல் செய்து உட்கொள்ளலாம். முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் சாம்பார் போன்றவை தமிழர்களிடையே அதிகம் உபயோகிக்கும் உணவாக உள்ளது.

இரத்த விருத்திக்கும் தாது விருத்திக்கும் முருங்கை காய்கள் சிறந்தது. எலும்புருக்கி நோய் தீர்த்து வைக்கும். பெண்கள் இதை தொடர்ந்து உணவுடன் சேர்த்து வந்தால் அவர்களுக்கு எற்படக் கூடிய மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். காக்காய் வலிப்பு உள்ளவர்கள், பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதை தொடர்ந்து உணவோடு சேர்த்து கொள்ளலாம். விட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை அதிகம் சாப்பிட வேண்டும்.

சாதாரணமாக இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் முதுமையை இன்னும் சில காலங்கள் தள்ளிப்போடலாம் என்பது சித்தர்களின் கூற்று. இலை பூ பட்டை முதல் அனைத்திலும் சத்துக்கள் நிரம்ப உள்ளதால் வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து உணவோடு சேர்த்து ஆரோக்யமாக வாழ்வோம். 

Saturday, February 6, 2016

காயத்துக்கு (உடலுக்கு) ஏற்ற காய்கள் - இன்று தேங்காய்


தாழை, தெங்கு, மாதர்கனி, முக்கண்கனி, ரசகந்தம், சிரமபலம், இராசபலம், சுராகாரம், பானிவிருக்கம், தேங்கனி இவையெல்லாம் தேங்காயின் மற்ற பெயர்கள். தேங்காய் என்பது முழுதான ஊட்டமிகு உணவு. ரொம்ப பசியா இருக்குது, வீட்ல ஒன்னுமே இல்ல அப்படின்னா அந்த நேரத்துல கொஞ்சம் தேங்காய் எடுத்து அப்படியே சாப்பிட்டால் பசி இருந்த இடம் தெரியாம ஓடிரும். மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு என்னவென்றால் இது இந்த சீசனில்தான் கிடைக்கும் என்று இல்லை. எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.

 தேங்காய் சேர்க்காத சமையல் ருசிக்காது. அந்த அளவு சமையலில் முக்கியமானது இதன் பங்கு. ஆனால் இதை அதிக சூட்டில் வைத்து சமைக்கும்போது இதன் கொழுப்பு சத்தானது உடலுக்கு தீங்கு உண்டாக்கும் சத்தாக மாறிவிடுகிறது. அதனால் இதை சமையலில் இறுதியாக உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் இந்த தேங்காயை அம்மி அல்லது உரலில் இட்டு அரைத்து பயன்படுத்தும்போது அதன் உயிர் சத்து முழுமையாக நமக்கு கிடைக்கிறது. ஆனால் மிக்சியில் இட்டு அரைக்கும் போது அளவுக்கதிகமான சுழற்சியால் அதனுடைய உயிர்சத்துக்கள் அழிந்து விடுகிறது. உணவுப்பொருள்கள் விரைவில் கெட்டுப்போவதற்கு காரணமே இதனால்தான்.

சமைக்காத தேங்காய் பால் உணவு உடலுக்கு நன்மை தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி, இருமல் நீக்குகிறது. புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குடலில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்றுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. மழைக்காலங்களில் உடலுக்கு தேவையான வெப்ப சக்தியினை அளிக்கிறது. மற்றும் உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் மற்ற அசைவ உணவுகளை விட ஆற்றல் மிகுந்தது.

ஒரு மனிதன் ஒரு தேங்காயை அப்படியே சவைத்து சாப்பிடலாம். இது ஒரு நேர உணவுக்குண்டான ஆற்றலைத்தரும். இதனால் நமக்கு ஒரு வேளை உணவு தயாரிக்க செலவிடும் நேரம், எரிபொருள், பொருள் செலவு ஆகியவை மிச்சப்படுகிறது.

தேங்காயை துருவி பூ எடுத்து அதை அரைத்து பாலெடுத்து, அந்த பாலை கொஞ்சம் இனிப்பு சேர்த்து (வெள்ளை சர்க்கரை தவிர்க்கவும்) வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பி சப்பி சாப்பிடலாம். மடமடவென்று குடிக்கக்கூடாது.

இந்து கோவில்களில் தேங்காய் பழம் கொண்டு போய் பூஜை செய்துவிட்டு வந்து அதையே உணவாக சிலர் எடுத்துக்கொள்வதை பார்க்கலாம். இது ஒரு ஆரோக்யமான உணவு என்பதை அன்றைய தமிழர்கள் கற்றறிந்து அதை செயல்படுத்தி இருந்தார்கள். நாமளும் அதை தொடர்வோம். நலமாக வாழ்வோம்.

Friday, January 29, 2016

உணவுபொருட்களை நாமே தயார் செய்து கொள்வது எப்படி? இன்று தேங்காய் எண்ணெய் ...


காலைல எந்திச்சி குளிச்சதுல இருந்து இரவு வரைக்கும் நமக்கு நெறைய விசயங்கள்ல தேங்காய் எண்ணெய் உபயோகப்படுது. கடையில போயி பாக்கெட்ல இல்ல பிளாஸ்டிக் டப்பால இருக்குற எண்ணெய்தான் வாங்கி உபயோகப்படுத்துறோம். சரி. இப்படி நாம வாங்கி உபயோகிக்கற எண்ணெய் எல்லாம் தேங்காய் எண்ணையே கிடையாது. எப்படிங்கரீங்களா? சந்தைல தேங்காய் விலை ஏறும் போது தேங்காய் எண்ணெய் விலை எறனும்லா? ஆனா இங்க ஏறி இருக்காது. அப்போ எப்பதான் ஏறும்...? நல்லா கவனிங்க.... பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறும் போதுதான் இந்த தேங்காய் எண்ணெய் விலையும் ஏறி இருக்கும். பெட்ரோலிய பொருட்களுக்கும் கடைல வாங்குற தேங்காய் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்..? பெட்ரோலிய பொருட்களோட ஆக கழிவுதான் நாம உபயோகப்படுத்துற தேங்காய் எண்ணெய். அந்த கழிவைத்தான் நம்ம தலையில தேச்சிக்கிறோம். ஏன், நம்ம உணவுப்பொருட்கள்ள கூட அதத்தான் சேத்துக்கிறோம். சின்னக்குழந்தைகளுக்கு தேய்க்கிற பேபி ஹேர் ஆயில் கூட இந்த கழிவுதாங்க. சின்ன அதிர்ச்சியா கூட இது இருக்கும். ஆனால் இதுதாங்க 100% உண்மை. (பாட்டில் மற்றும் பாக்கெட்டில் எழுதி இருக்கும் ingredients பாருங்கள். அதில் மினரல் ஆயில் என்று இருக்கும். அதுதான் பெட்ரோலிய கழிவு. இதோடு வாசனை திரவியத்தையும் சேர்த்து இருப்பார்கள்).

இந்த எண்ணையை நாம உபயோகபடுத்துரதால நமக்கு என்னென்ன கெடுதி அப்படிங்கிறதையும் இப்ப நான் சொல்லிடுறேன். 
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.
முடி கொட்டும்.
முடி சீக்கிரம் வெள்ளையாகி போகும்.
தோல் வறண்டு போய்விடும்.
உணவோடு இதை சேர்த்துக்கொள்ளும்போது உடலுள் சென்று கெட்ட கொழுப்புகளாக மாறி உள்ளேயே தங்கிவிடும்.

அப்போ சுத்தமான தேங்காய் எண்ணெய் பெறுவது எப்படி? வெகுசில கடைகளிலே கிடைக்கும் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணையை வாங்கி பயன்படுத்தலாம். அதன் தரத்தினை உறுதி செய்துகொள்வது நல்லது. அப்படி இல்லை என்றால் நாமே எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி சொல்கிறேன். இம்முறையானது முன்னோர்கள் வீட்டினில் பயன்படுத்திய ஒன்றுதான். இந்த தலைமுறையினருக்கு அது மறைக்கப்பட்டு விட்டது. அதன் செய்முறையை பற்றி இப்போது சொல்கிறேன்.

வெள்ளோட்டமாக முதலில், ஒரு நூறு மில்லி அளவு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஒரு தேங்காய் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். அந்த காய் இளம் காயாகவும் இல்லாமலும், முற்றிலும் தண்ணீர் வற்றிய காயாகவும் இல்லாமலும் தேங்காய் பூ துருவி எடுக்கும் தன்மை உள்ள காயாக இருக்க வேண்டும். (சாதாரணமா சமையலுக்கு பயன்படுத்துகின்ற காய் போல்) இப்போது தேங்காயை துருவி பூ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பூவில் சிறிதளவு நீர் விட்டு கையால் நன்கு பிசைந்து பால் எடுக்கவும். அந்த பாலை வடிகட்டி, பின்பு மீண்டும் சிறிதளவு தண்ணீர் விட்டு கையால் பிசைந்து பால் எடுக்கவும். பூவில் இருந்து முழுவதும் பால் எடுக்கும் வரை இம்முறையினை மீண்டும் மீண்டும் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். (சிலர் வெந்நீர் விட்டு கலந்து பால் எடுப்பார்கள். அப்படி செய்ய வேண்டாம். மிக்சியில் அடித்து பால் எடுக்கவும் கூடாது. ஆனால் ஆட்டு உரலில் இட்டு அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம்). இப்படி எடுக்கப்பட்ட பாலை ஒரு காட்டன் துணியால் நன்றாக வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு இரவு அல்லது பதினைந்து மணி நேரமாவது மூடி வைத்து விடவும். குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மூடியை திறந்து பார்த்தால் தேங்காய் பாலானது பாலாடை கட்டி போல நீரில் மிதக்கும். அந்த பாலாடை கட்டியை ஒரு அகலமான கரண்டியால் வழித்து எடுக்கவும். மீதமான நீரை அப்புறப்படுத்தி விடவும்.

இப்போது ஒரு வாணலியில் இந்த பாலாடை கட்டியை ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். காஸ் அடுப்பு என்றால் 'சிம்'மில் வைத்து சூடேற்றவும். ஒரு கரண்டியால் பாலாடை கட்டியை லேசாக கிளறி விட்டுக்கொண்டே வரவும். நேரமாக நேரமாக பாலாடை கட்டியிலிருந்து எண்ணையானது வெளியேறும். இறுதியாக எண்ணெய் முழுதும் கட்டியிலிருந்து வெளியேறிய பின் கட்டியானது பழுப்பு நிறமாக மாறி அடியில் தங்கிவிடும். இந்த நிலையில் அடுப்பில் இருந்து வாணலியை கீழே இறக்கிக்கொள்ளுங்கள். இப்போது முகர்ந்து பார்த்தால் தேங்காய் வாசம் 'கும்'மென்று மணக்கும். சூடு ஆறிய பின்பு காட்டன் துணியால் வடிகட்டி பாட்டிலில் அடைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதன்முறையாக செய்யும்போது சில தவறுகள் நேரலாம். குறிப்பாக அதிக சூட்டினால் எண்ணெய் அடி பிடித்துக்கொண்டு லேசான கருகல் வாடை வரலாம். அப்படி இருந்தாலும் எண்ணையை பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்தடுத்து செய்யும் போது தவறுகளை சரி செய்து கொள்ளலாம். முதலில் ஒரு தேங்காய் வைத்து முயற்சித்து பார்த்தோம். பின்பு படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம். இப்படி தயாரித்த எண்ணையை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்பதையும் அடுத்ததாக பார்ப்போம்.

தலைக்கு தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால்
முடி உதிராது.
முடி உடைந்து போகாது.
முடி வறட்சி ஏற்படாது.
பேன், பொடுகு தொல்லை இருக்காது.
மயிர்க்கால்கள் ஆரோக்யமாகி நன்றாக வளரும்.
சீக்கிரம் வெள்ளை முடி (இள நரை) தோன்றாது.

குழந்தைகளுக்கு இந்த எண்ணையை உடலில் தேய்த்து வந்தால் தோல் மினுமினுப்புடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கும்.

குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவரும் தங்களது தோல் மினுமினுப்பு பெற இந்த தேங்காய் எண்ணையை உபயோகிக்கலாம்.

இந்த எண்ணையை சமையலுக்கு பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலும் நல்ல மனமுடன் இருக்கும்.

மனிதனுக்கு வரக்கூடிய நோய்களில் பெரும்பாலான நோய்கள் கடைகளில் விற்கும் செயற்கை முறையில் தயாரித்து விற்கப்படும் எண்ணெய்களால்தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

Tuesday, January 26, 2016

பலன் தரும் பழங்கள் - இன்று எலுமிச்சம் பழம்



எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சம்பழத்தினை மட்டும் எலிகள் கடிக்காது. (எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்திருக்கும் பழம் என்பதால் இதனை முன்னோர்கள்  எலிமிச்சம்பழம் என்றும் சொல்வதாக கூறுவார்கள்). எலுமிச்சம்பழம் எல்லாருக்கும் தெரிந்த பழம்தான். பொதுவாக இதை ஊறுகாய் இடுவதற்கும், சாறு பிழிந்து அருந்துவதற்கும், புதிதாக கார் வாங்கினால் டயருக்கு அடியில் வைப்பதற்கும் (திருஷ்டி கழியுமாம்..) என ஒரு சில வகையிலே மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். இதன் பயன் இவ்வளவுதான் என்றும் நமக்குள்ளே நாமே வரையறுத்துக்கொண்டு அதற்கு மேல் இதை உபயோகிப்பது கிடையாது. ஆனால் இதை தினசரி ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கு எடுத்துக்கொள்ளும் போது எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கிறது. இதனை 'தேவ கனி'அல்லது 'ராஜ கனி' என்று முன்னோர்கள் கூறியதன் ரகசியம் இப்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே. எனக்குத்தெரிந்த வேறு சில பயன்களையும் உங்களுடன் இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த எலுமிச்சம்பழத்தின் பலன்களை இரண்டு வகையாக எடுத்துக்கொள்வோம். அதாவது உடலுக்கு உள்ளே எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்? உடலுக்கு வெளியே சேர்த்துக்கொள்வதால் என்ன பலன்கள்? என்றும் பார்க்கலாம். முதலில் உடலுக்கு உள்ளே உட்கொள்வதால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

எழுமிச்சம்பழத்தின் சாரானது மிகவும் புளிப்புத்தன்மை கொண்டதனால்  (5% சிட்ரிக் ஆசிட் அதனுள் இருப்பதால்) நேரிடையாக நம்மால் சேர்த்துக்கொள்ள முடியாது. இதில் நீர் மற்றும் இனிப்பு சேர்த்துதான் ஜூஸாக சாப்பிட முடியும். இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. அதே போல் ஐஸ் கட்டியோ, ஐஸ் தண்ணீரோ சேர்க்கக்கூடாது. ஆனால் நம்ம மக்கள் அனைவரும் குளிர்ச்சியான ஜூஸ் குடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்றால்  மண்பானை நீர் சேர்த்துக்கொள்ளலாம். அந்த குளிர்ச்சியே போதுமானது. இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்தே பழகிவிட்டோம். கூடுமான வரை அதை தவிர்த்துவிட்டு, பனை வெல்லம் அல்லது அச்சுவெல்லம் அல்லது உருண்டைவெல்லம் அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமும் கண்டிப்பாக இந்த ஜூஸ் பருகுவது என்பது மிகசிறந்தது. ஏனெனில், இதை உமிழ் நீருடன் சேர்த்து பருகும்போது இந்த கலவை வயிற்றுனுள் சென்று ஜீரண நீர்களுடன் விரைவில் கலக்கிறது. அங்கு செரிமானம் ஆகி திரவ நிலையை அடைந்து குடலால் உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்கு சென்று அங்கு சில இரசாயன மாற்றமடைந்து இரத்தத்துடன் கலந்து இருதயத்திற்கு செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் மூலம் உடல் முழுவதும் சென்றடைகிறது. பின்பு நுரையீரலுக்கும் சென்று மீண்டும் சுற்றி இறுதியாக சிறுநீரகத்திற்கும் தோல் பகுதிகளுக்கும் செல்கிறது. மறுநாள் இது உமிழ் நீராகவும் ஜீரண நீராகவும் மாறுகிறது.

என்னடா, ஜூஸ் குடிச்சோமா, சிறுநீரா அது வெளிய போச்சான்னு இல்லாம இது ஏன் இவ்வளவு சுத்து சுத்துதுன்னு உங்களுக்கு தோணலாம். ஏன் அது சுத்துரத பத்தி இப்படி படிக்கும்போதே உங்களுக்கு தலை சுத்தும்னு நெனைக்கிறேன். விடுங்க. கொஞ்சம் அதப்பத்தியும் தெரிஞ்சிக்குவோம். இவ்வாறு ஒவ்வொருபகுதிகளுக்கும் செல்வதால் ஏற்படும் பயன்களையும் தெரிஞ்சிக்கோங்க.

வாய், தொண்டை, உணவுக்குழாய், குடல், வயிறு ஆகியவற்றை நமக்கு தெரியாமலே எழுமிச்சம்பழமானது சுத்தப்படுத்துகிறது. உடலில் மிகப்பெரிய இரசாயன கூடமான கல்லீரலையும் சுத்தபடுத்துவதோடு கல்லீரலுக்கு தேவையான பல அமிலங்களையும் போகிறபோக்கில் கொடுத்துவிட்டு செல்கிறது. இதயத்திற்கு தெம்பு கிடைக்கிறது. இரத்தத்தின் கெட்டித்தன்மையைக் குறைத்து இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்துவிட்டு வேறு எதாவது தடைகள் இருந்தாலும்கூட அதையும் கரைத்துவிட்டு வெளியேற்றிவிடுகிறது. இதனால், உடம்பில் உள்ள அனைத்து இரத்த நாளங்களிலும் இரத்த ஓட்டமானது தங்கு தடையில்லாமல் செல்ல உதவுகிறது. அப்படி ஓட்டம் சீரானால் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்புடனும் நோய் எதிர்ப்புத்தன்மையுடனும் செயல்படுகிறது.

இத்தோடு முடியவில்லை நீங்கள் குடித்த அந்த எலுமிச்சம்பழத்தின் சாற்றின் நன்மைகள். இது அடுத்ததாக நுரையீரலுக்கு செல்கிறது. அங்கு காற்று சிற்றறைக்குள் பசை போல சிக்கி இருக்கும் சளியினை கரைத்து வெளியேற்றுகிறது. இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். ஜூஸ் குடிச்சேன். சளி புடிச்சிடுச்சி அப்படின்னுதான கேள்விபட்டுருக்கோம். இப்படி சொல்றீங்களேன்னு கேக்க தோணும். இது உண்மை இல்லை. நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் நிகழ்வைத்தான் சளி பிடித்துக்கொள்கிறது என்று தவறாக உணரப்பட்டுக்கொண்டு வருகிறது. (அதை வெளியே செல்ல அனுமதியுங்கள். மாத்திரை மருந்துகள் போட்டு தடுக்காதீர்கள். அது பக்க விளைவுகளைத்தான் உண்டாக்கிவிடும்).

அடுத்தபடியாக சிறுநீரகம் சென்று சிறுநீரை நன்றாக வடிகட்ட உதவி செய்தும் கற்கள் இருந்தாலும் அதனை உடைத்து வெளியேற்றவும் உதவுகிறது.

அடுத்த வேலையாக தோல் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள கொழுப்புகளையும் கரைத்து வியர்வை துளைகளை விரிவடையச் செய்து வியர்வையை விரைவாக வெளியே தள்ளுகிறது.

ஆக உடம்பில் உள்ள தேவையற்ற அனைத்து கழிவுகளையும் வெளியே தள்ளுவதில் எலுமிச்சை சாறு முதலிடம் வகிக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம், இதில் அமிலத்தன்மை இருக்கும் காரணத்தால் அல்சர், குடல் புண்கள், ருமேட்டிசம், ஆர்த்தரைட்டீஸ் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மிக குறைவான அளவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் ஏற்படும்  கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்புரை நோய் ஏற்படுவது குறைகிறது.

எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு நீரும் சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ஏற்படாது. வாய்ப்புண் ஏற்படாது,

அசைவ உணவு உட்கொள்பவர்கள் உணவுடன் சிறிதளவு சாறு பிழிந்து கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். பொதுவாக எண்ணெய் பலகாரங்கள் உண்ணும் போதும் சிறிது சாறு சேர்த்துக்கொண்டால் செரிமானம் சிறப்பாகும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வருவது மிக மிக சிறந்தது. அல்லது உணவுக்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உணவு உண்டு சிறிது நேரம் கழித்தோ சாற்றினைப் பருகுவது மேற்கண்ட பலன்களை கொடுக்கும்.(பருகும் போது மடமடவென்று குடிக்காமல் சப்பி சப்பி உமிழ் நீருடன் கலக்கச்செய்து குடிக்க வேண்டும்).

சரி. உடலுக்கு வெளியே சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும் இப்போது பார்ப்போம். பொடுகு தொல்லை இருப்பவர்கள் வாரம் ஒருமுறை சாற்றினை நேரிடையாக தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை என்பது இருக்காது. பொடுகு தொல்லை இல்லாதவர்களும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இப்படி தேய்த்து குளித்து வந்தால் அழுக்குகள் சேராது, பேன் தொல்லைகள் இருக்காது. முடி சுத்தமாகும். (ஷாம்பூ பயன்படுத்த தேவை இல்லை. ஷாம்பூவினால் ஏற்படும் முடி உதிர்வுகள் கூட எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வருவதால் மட்டுப்படும்).

சாற்றினை நீரில் கலந்து முகம் கழுவினால் கரும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும். முகம் தெளிவடையும்.

சருமத்தில் புண்கள், சொறி சிரங்குகள் இருப்பின் இச்சாற்றினை நீரில் கலந்து கழுவி வர புண்கள் குணமடைந்து தோல்கள் மிருதுவாகும்.

தேள் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டினால் அவ்விடத்தில் பழத்தை இரண்டாக நறுக்கி அந்த இடத்தில் தேய்த்து வர விஷ முறிவு ஏற்படும்.

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி கிராம்புகள் சிலவற்றை அந்த எலுமிச்சை துண்டில் சொருகி கொசு வரும் இடங்களில் வைத்து விடுங்கள். கொசு தொல்லை என்பது கிடையவே கிடையாது. தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் கொசுவிரட்டிகளுக்கு குட்பை சொல்லிவிடுங்கள்.

பயணத்தின் போது ஏற்படும் குமட்டலை தடுக்க இப்பழத்தினை லேசாக கிள்ளிவிட்டு அதன் வாசத்தினை முகர்ந்துகொள்ள குமட்டல் அடங்கும்.

எலுமிச்சை சாற்றுடன் சிறிது தண்ணீரும் கலந்து வீட்டின் தரை மற்றும் குளியலறை கழிப்பறைகளின் தரைகளை துடைத்துக்கொள்ளலாம். சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இவ்வளவு பயன் தரும் எலுமிச்சையை தேவ கனி என்று சொல்வது மிகப்பொருத்தமே.


Saturday, October 24, 2015

பலன் தரும் பழங்கள் - இன்று திராட்சை

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே யூதர்கள் திராட்சை பழத்தின் பலன் அறிந்து அதன் ரசத்தை தங்கள் உணவுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். அநேகம் பேர் இதை நாம் கிறித்துவ புனித நூலான பைபிளின் மூலம் தெரிந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் உபயோகம் என்பது மிகக்குறைந்து அதன் சுவைகொண்ட செயற்கை குளிர்பானங்களை  மட்டுமே எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்யத்திற்கு கேடு உண்டாக்கிக்கொண்டு இருக்கிறோம். நேரிடையாக திராட்சை பழங்கள் சாப்பிடும் போது ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி தெரியாமல் இருப்பது என்பது நமக்கு மிகப்பெரிய பலவீனம். எனவே இக்கட்டுரையில் அதைப்பற்றி எனக்கு தெரிந்த வகையில் கூறுகிறேன்.


நம் நாட்டில் அதிகமாக விளையக்கூடிய கனி வகைகளுள் திராட்சையும் ஒன்று. இதில் கருப்பு மற்றும் பச்சை திராட்சை என இரண்டு ரகங்கள் உள்ளது. கருப்பு ரகத்தில் பன்னீர் திராட்சை என்று ஒன்று உள்ளது. குறைந்த புளிப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும் இவ்வகை பன்னீர் திராட்சையில் உண்டு. (இந்த இரண்டு ரகங்களிளுமே விதை உள்ளது, விதை இல்லாதது என்று உள்ளது. பொதுவாக விதை இல்லாத கனிகளையோ காய்கறிகளையோ உணவில் எடுத்துக்கொள்ளவே கூடாது. ஏனென்றால், விதை என்பது அடுத்த விருட்சத்தை உருவாக்கக் கூடியதாகும். விதை இல்லாத பழங்களை சாப்பிடும் போது நாமும் அடுத்த சந்ததியை உருவாக்கும் தகுதி இல்லாத நிலைக்கு தள்ளப்படுவோம். ருசிக்காகவும், அதிக அளவு விளைச்சலுக்காகவும் மட்டுமே இவ்வகை விதை இல்லாத வீரிய ரக விதைகள் தயாரிக்கப்படுகிறது. இதைப்பயிரிட்டால் ஒரு காலத்தில் மண்ணே மலடாகிவிடும்).

எப்படி? எவ்வாறு சாப்பிடலாம் இந்த பழத்தை?
அரைக்கிலோ அளவு கொண்ட பழத்தை சாப்பிடுவது என்பது ஒரு நேர உணவு உட்கொள்ளுவது என்பதற்கு சமம். ஒரு மனிதன் அப்படி அரைக்கிலோ பழத்தினை அப்படியே சாப்பிடுவது என்பது சிரமமான ஒரு காரியமாக இருக்கும். ஆகவே நாம் இதை சாறு எடுத்து சாப்பிட்டால் மிகுந்த பலனும் கிடைக்கும், இலகுவாகவும் இருக்கும். அப்படி சாறு எடுக்கும் போது கண்டிப்பாக மிக்சியில் அரைத்து சாறு எடுக்கக்கூடாது. ஏனெனில், பழத்தில் உள்ள விதைகளும், தோல்களும் சேர்ந்து அரைந்து  அதனுடைய உண்மையான ருசி கெட்டு ஒருவித துவர்ப்புத்தன்மை கொடுத்துவிடும். ஆதலால் கைகைகளால் திராட்சையினை பிழிந்து சாறு எடுப்பது என்பதே சரியான முறை. சாறு எடுத்து பின்பு அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்து கொள்ளலாம். இவ்வகை சாறே அதிக ருசியுடனும் தெளிவானதாகவும் இருக்கும். இனிப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெள்ளை சர்க்கரையை (அஸ்காவை) சேர்த்துக்கொள்வதை தவிர்த்து, பதிலாக கருப்பட்டி, அச்சுவெல்லம், பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது என்பதே சிறந்தது. அதேபோல் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளையோ, பிரிட்ஜ் தண்ணீரையோ சேர்க்கக்கூடாது. ஒரே நேரத்தில் குடிப்பது என்பது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம். பழகிய பின்னர் ஒரே நேரத்தில் பருகி கொள்ளலாம்.

எடுக்கப்பட்ட சாறை மட மடவென குடிக்காமல், சப்பி சப்பி உமிழ் நீருடன் கலந்து குடிக்கவும். பொதுவாகவே எந்த ஒரு உணவையும், ஏன், தண்ணீரையும் கூட உட்கொள்ளும் போது சப்பி சப்பி உமிழ் நீருடன் கலந்து சாப்பிடுவது என்பதே சிறந்த முறை. அப்போதுதான் அதனதன் முழுப்பயனும் நமக்கு கிடைக்கும்.

'இதை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்க போகுது?' என்று கேட்பர்களுக்கு..,
சமைத்த உணவை விட நூறு மடங்கு நன்மை தரக்கூடியது இந்த அரைக்கிலோ பழச்சாறு. இதை எந்த ஒரு உணவும் உட்கொள்ளாமல் ஒரு நேர உணவாக எடுத்துக்கொண்டால், கீழ்க்கண்ட பலன்களை பெறலாம்.

உடலில் உள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றும். இதனையே இப்பழ சாறு குடுத்தால் சளி பிடிக்கும் என்று தவறாக எண்ணுகிறார்கள்.

திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது.
இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

ஆஸ்த்துமா நோயை குணப்படுத்துகிறது. இப்பழம் சேர்த்துக்கொள்ளாமல் ஆஸ்த்துமா நோயை குணப்படுத்துவது என்பது முடியாத காரியம்.

இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இருதய இரத்த குழாய் அடைப்பு நோயாளிகள் பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பழத்தினை சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள் இப்பழத்தினை எடுத்துக்கொண்டால் அது சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.

உடல் வளர்ச்சி குறைந்தவர்கள்,  உடல் பலகீனம் உள்ளவர்கள்,  தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை கொண்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர விரைவில் நிவாரணம் அடையலாம்.

புற்று நோய் செல்களைக் கரைத்து வெளியேற்றும் தன்மை உடையது.

நான்கு மாத குழந்தைக்குக் கூட சம அளவு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு இந்த சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் வராது.

உலர்ந்த திராட்சையையும் நாம் பயன்படுத்தலாம். பல நூறு ஆண்டுகளாகவே இந்த உலர் திராட்சையானது உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயணத்தின் போது இந்த உலர் திராட்சை சாப்பிட்டால் சோர்வில்லாமல் பயணம் செய்யலாம். தேவையான சக்தியும் கிடைக்கும்.


பல வகை உணவுகள் என்பது உடலுக்கு தீமை !
பழ வகை உணவுகள் என்பதே உடலுக்கு நன்மை !

Sunday, October 4, 2015

நலம் தரும் காய் கனிகள் - வரிசையில் இன்று நெல்லிக்கனி

கனிகளுள் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் 'ராஜ கனிகள்' என்று பெயர். ஒன்று எலுமிச்சை மற்றொன்று நெல்லிக்கனி. இக்கனியின் ஆயுள் நீட்டிக்கும் தன்மை தெரிந்துதான் அதியமான் அவ்வைக்கு கொடுத்ததாக வரலாறுகளில் கூறப்படுகிறது. இப்படி நீண்ட வரலாறு கொண்ட அமிர்தத்திற்கு ஒப்பான அந்த நெல்லிக்கனியின் சிறப்பைப்பற்றி இங்கே பார்ப்போம்.

'ஏழைகளின் ஆப்பிள்' என்று போற்றப்படும் நெல்லிக்கனியானது அரிநெல்லி என்றும் காட்டு நெல்லி அல்லது பெருநெல்லி என்றும்  இரு வகைகளில் நமக்குக்கிடைக்கிறது. இதில் காட்டு நெல்லி மட்டும் அதிக மருத்துவகுணமும் பயன்படுவதுமாய் உள்ளது என்பதால் அதைப்பற்றி மட்டும் இங்கே விவரிக்கலாம் என்று இருக்கிறேன்.



சிறு சிறு இலைகளுடன் பெரிய மரமாகவும் காய்கள் அனைத்தும் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குவதும் பார்ப்பதற்கே அந்த மரங்கள் ரம்மியமாய் இருக்கும். பொதுவாக கோடை காலங்களில் இம்மரத்தில் காய்கள் அதிகமாய் காய்க்கும். ராஜ கனிகளான எலுமிச்சை மற்றும் நெல்லிக்கனி ஆகியவற்றின் புளிப்புத்தன்மை மட்டுமே (சிட்ரிக் ஆசிட்) உடலுக்கு நன்மை மட்டுமே செய்யும்.

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் அளவிட முடியாததாகும். இதன் இலை, பட்டை, வேர், பூ, கனி என அனைத்து பகுதிகளுமே மருந்தாக பயன்படுகிறது எனலாம். இம்மரத்தின் நிழலில் நின்று இளைப்பாறி மரத்தின் காற்றை சுவாசித்தாலே நோய்கள் பறந்து போகும். இம்மரத்தின் நிழல் தன்மை கூட உடலுக்கு ஒரு வித குளிர்ச்சியைக்கொடுக்கும்.

அக்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் அவர்கள் குளிக்க பயன்படுத்தும் நீர்நிலைகளில் நெல்லி மரக்கட்டைகளை போட்டு வைத்து அதில் குளிப்பதாகவும், சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக நெல்லிக்கனியினையும் சேர்த்து கொள்வதாகவும், இரவு தூங்கும் போது நெல்லி இலைகள் கொண்டு தயாரித்த படுக்கையில் துயில் கொள்வதாகவும் புராணங்களில் சொல்லப்படுவதுண்டு. இப்படி காலை முதல் இரவு வரையிலும் தங்களது வாழ்க்கையை நெல்லியோடு இணைந்து வாழ்ந்ததால் அவர்கள் நீண்ட ஆயுளோடும் கண்கள் அதிக பிரகாசத்துடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துள்ளார்கள். நாமும் நெல்லியை பல்வேறு வடிவத்தில் பயன்படுத்துவதன் மூலம், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் எந்த நோய்களும் வரவிடாமல் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். எளிதில் குறைந்த விலையில் கிடைப்பதாலோ என்னமோ நாம் இக்கனியை முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கிறோம்.

நெல்லிக்கனியின் சுவையானது சுவைக்கும் போது முதலில் துவர்ப்பாகவும் பின் புளிப்பாகவும் இறுதியில் இனிப்பு சுவையையும் கொடுக்கக்கூடிய அதிசயமான கனி. நெல்லிக்கனியின் சிறப்பு அதில் உள்ள விட்டமின் சி எனப்படும் உயிர்ச்சத்துதான். 100 கிராம் அளவுள்ள மற்ற கனிகளின் விட்டமின் 'சி' சக்தியை இக்கனியுடன் ஒப்பிடும் போது,
அன்னாசி          - 0.12 மி.கி.
தக்காளி             - 32 மி.கி.
எலுமிச்சை      - 63 மி.கி.
வாழைப்பழம் - 170 மி.கி.
கொய்யா           - 200 மி.கி.
நெல்லிக்கனி  - 600 மி.கி.

மற்ற பழங்களில் உள்ள விட்டமின் 'சி' சத்தானது காற்றாலும், வெப்பத்தாலும் எளிதில் அழியக்கூடியது. ஆனால், நெல்லியில் உள்ள விட்டமின் சக்தியானது எந்த சூழ்நிலையிலும் சிதையாமல் நீண்ட நாட்கள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது எனலாம்.

நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி, நெல்லி விதைப்பொடி, திரிபலாசூரணம், தேன் நெல்லி இவ்வாறு நெல்லிக்கனியினை பல்வேறு வகைகளில் தயாரித்துக்கொள்ளலாம். இவற்றின் மருத்துவ பயன்களை தொடர்ந்து பார்ப்போம்.

இப்பழத்தினை நேரிடையாக சாப்பிடுவதன் மூலம் அதன் முழுப்பயனையும் அடையலாம். அது மிக சிறந்தது.


  • வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றையும் சமப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது.
  • பித்தம் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய வாந்தி, மயக்கம், காமாலை ஆகியவற்றை தடுத்துவிடுகிறது.
  • அதிகப்படியான உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சியை தர வல்லது.
  • ரத்தம் சுத்தமாகி, உடல் வலிமை பெறலாம்.
  • இன்றைய உணவுப்பழக்க முறையில் மசாலா பொருட்களையும், எண்ணையும் சேர்ப்பது என்பது அத்தியாவசியமாகி விட்டது. இவற்றை உணவுடன் சேர்ப்பதால் இதன் கழிவுகள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உள் உறுப்புகளில் தங்கி தொல்லைகள் பல கொடுப்பதோடு, உறுப்புகளை பலவீனமடையவும் செய்கிறது. இதற்கு நெல்லிக்கனிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உறுப்புகளில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி விடுவதோடு சுத்தமாகவும் வைத்துள்ளது. இந்த மருத்துவத்திற்கு நிகரான மருந்து நெல்லிக்கனியை தவிர வேறு எதுவும் இல்லை எனலாம்.
  • இதைப்பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களது கருப்பை கோளாறுகள் அனைத்தும் சீர் செய்யப்படும்.
  • என்றும் இளமையோடு இருந்திட 'காயகல்பம்' சாப்பிட்டு வரலாம் என சிலர் கூறுவார்கள். ஆனால், எவரும் எக்காலத்திலும் இளமையோடு இருந்து விடமுடியாது. ஆனால் முதுமையை தள்ளிப்போடலாம் என்பதே சரி. உடல் முதுமை அடையக்காரணம் உடலின் செல்கள் முதுமை அடைவதே. அப்படி செல்கள் முதுமை அடைவதை தள்ளிப்போட நெல்லிக்கனிகள் பெரும் பங்காற்றுகிறது.
  • விட்டமின் 'சி' சத்து குறைவால் ஏற்படும் ஸ்கார்வி எனும் நோயால் எலும்புகள் வலு இழந்து போகும். பற்கள் சொத்தையாகும். ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். நகங்கள் வெண்மை நிறமடையும். இதற்கு மிக சிறந்த நிவாரணி நெல்லிக்கனி ஆகும்.
  • உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஆதி காரணமான மலசிக்கலுக்கு மருந்து, மாத்திரைகள் என எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நெல்லிக்கனியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்.
  • தவறாமல் தினம் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் முதுமையிலும் கண் பார்வை என்பது மிகத்தெளிவாக இருக்கும். தலை முடி உதிர்தல், சளி, தும்மல், பீனிசம் போன்ற நோய்கள் அண்டாது.
  • மது அருந்துவோர்களின் உடல், உள் உறுப்புகள், நரம்பு மண்டலம் என அனைத்தும் வெகுவாக பாதிப்படைந்திருக்கும். இவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனியினை ஏதாவது ஒரு முறையில் எடுத்து வர உடல் தேறி வரும். ஆனால் கண்டிப்பாக அவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தி இருக்க வேண்டும்.
  • உடலில் ஏற்பட்டுள்ள நாட்பட்ட புண்களை, பள்ளம் விழுந்த புண்களை ஆற்றிட, நெல்லிக்கனியின் விதைகளை நீக்கி அரைத்து பற்று போட்டு வர, புண்கள் ஆறி விரைவில் குணமாவதோடு பள்ளமும் சரி ஆகிவிடும்.
  • அஜீரணம், இதய பலவீனம், அதிக ரத்த அழுத்தம், பசி இன்மை, நாக்கில் ருசி இன்மை, தோல் நோய்கள் இப்படி இதன் மருத்துவ பயன்கள் நீண்டு கொண்டே போகிறது.

பழம் கிடைக்கும் காலத்தில் தினமும் குறைந்த பட்சம் ஒரு பழமாவது சாப்பிட்டு வாருங்கள். அல்லது சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் அது உங்களை ஆரோக்கியமாக்கி ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கனிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றின் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். அதில் வேண்டிய அளவு நீர் விட்டு, இனிப்பு சேர்த்து பருகி வாருங்கள். இப்படி செய்வதால், சிறுநீர் எரிச்சல், ஆசனவாய் எரிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.

காய்ச்சின பாலில் இவ் நெல்லிச்சாறினை சிறிது கலந்து, அதனுடன் இனிப்பும் சேர்த்து பருகி வர பாலின் மந்த குணம் மாறி எளிதில் விரைவாக செரிமானம் ஆகும். இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வருவது என்பது அவர்களது ஜீரண சக்தியை எளிதாக்கும்.

மேலே சொன்னது எல்லாம் நேரிடையாக பழங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள். கனிகள் கிடைக்காத காலங்களில் நாட்டு மருந்து கடைகளில் நெல்லிப்பொடிகள் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.


  • தினமும் இரவு உறங்க செல்லும் முன் அரை டீஸ்பூன் அளவு பொடியினை பாலுடனோ அல்லது தேன் கலந்தோ, இரண்டும் கிடைக்காத பட்சத்தில் இளஞ்சூட்டில் உள்ள தண்ணீருடனோ பருகி வர, பழங்கள் நேரிடையாக சாப்பிடுவதின் பலன்களை பெற்றிடலாம்.
  • நெல்லிப்பொடியுடன் சாம்பல் சம அளவில் கலந்து பல் தேய்த்து வர, பல் கூச்சம், பல் வலி, பல் சொத்தை, பல் ஆட்டம், ஈறு கெட்டு போதல் போன்ற பல் சம்பந்தப்பட்ட நோய் எதுவும் அண்டாது. வாழ்நாளில் பல் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் என்பதே இல்லை.
  • நெல்லிப்பொடியுடன் பச்சைப்பயிறு மாவு சம அளவு கலந்து, தலை மற்றும் உடலில் குளியல் பொடி போல தேய்த்து வர, தலை முடி உதிர்வு, தலை முடி வறட்சி நீங்கும். தோல் வறட்சி குறைத்து தோலினை மினு மினுப்பாக வைக்கும்.
  • வீடுகளில், அலுவலகங்களில் நாம் அருந்தும் தண்ணீரில், ஒரு லிட்டர் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் நெல்லிப்பொடி என கலந்து குடித்து வர, உள் உறுப்புகள் சுத்தமடைந்து அதன் செயல்பாடுகள் நன்றாக அமையும். மலச்சிக்கல்கள் தீரும்.


இது போக திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் பொடியாகும். இதை வாங்கி தினமும் உறங்க செல்லும் முன் ஒரு அரை டீஸ்பூன் அளவு தேனிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்து வாருங்கள். மேற் சொன்ன பலன்களை கொடுக்க வல்லது இச்சூரணம்.

மனிதனின் நல்ல ஆரோக்கியத்திற்கும், நீடித்த ஆயுளுக்கும்
இறைவனால் படைக்கப்பட்ட, எங்கும் எளிதாக மலிவாக
இயற்கையாக படைத்திட்ட அற்புத கனி இவ் நெல்லிக்கனி.
பயன்படுத்துவோம். பலனடைவோம்.

Saturday, September 26, 2015

உணவுபொருட்களை நாமே தயார் செய்து கொள்வது எப்படி? இன்று நல்லெண்ணெய்...

'வைத்தியனுக்கு கொடுக்கிறத வாணியனுக்கு கொடு' இப்படி ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் வைத்தியனிடம் போகாமல் நம்மள நாமே பாதுகாத்துக்கலாம் இல்லையா? நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப யோசிக்கவே செய்யணும். நம்ம உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், உடம்புக்கு வெளியே இருந்தாலும் சரி, உள்ள இருந்தாலும் சரி நாம உபயோகிக்கிற பொருள் நூறு சதவீதம் ஆரோக்கியமானதுதானா? சுத்தமானதுதானா? உடலுக்கு ஏற்றதுதானா? அப்படின்னு யோசிச்சி யாருமே பொருட்களை வாங்குறதும் இல்லை, உபயோகிக்கிறதும் இல்லை. இதுதான் உண்மை. அது பெரிய 'பிராண்டட்' கம்பெனி பொருளா இருந்தாலும் சரி. தொலைகாட்சி பெட்டியில விளம்பரம் செய்ற கம்பனிகளா இருந்தாலும் சரி. கண்டிப்பா அதுல ஆரோக்கிய கேடான விசயங்கள் இருக்கத்தான் செய்யும்.

அப்போ என்ன செய்ய? எப்படின்னுனாலும் பொருள்கள் வாங்கித்தான ஆக வேண்டி இருக்கு. அப்படிங்கறீங்களா? சரிதான். கடைகள்ள வாங்க கூடிய அந்த பொருட்கள வீட்டுல நம்ம கண்ணு முன்னால நாமளே செய்து உபயோகப்படுத்தினா.. "அப்படி நாம செய்ய முடியுமா..? அதுக்கு பெரிய பெரிய இயந்திரம்லாம் வேணுமே..."அப்படிங்கற முனுமுனுப்பெல்லாம் வேண்டாம். எளிய முறைகள்ள குறைந்த செலவில நீங்களே இலகுவா தயாரிக்கிற மாதிரி சொல்லிக்கொடுக்க நான் தயாரா இருக்கேன். அப்படிப்பட்ட சில பொருட்கள பத்தி நாம இந்த கட்டுரைகள்ல இனி தொடர்ந்து பார்ப்போம்.

அந்த வகையில இன்னைக்கு எள்எண்ணை தயாரிப்பது எப்படின்னு சொல்றேன். எள்எண்ணை அப்படின்னா நல்லெண்ணெய் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும். எல்லா எண்ணை பெயர்களுமே அதனது விதைகள் பெயரை தாங்கியே வரும். அப்படி இருக்க எள்எண்ணையை மட்டும் கூறும் போது நல்லெண்ணெய் என்பார்கள். இந்த எண்ணையை உபயோகிப்பதால் உடலுக்கு எந்தவிதமான தீமைகளும் கொடுக்காமல் நன்மையை மட்டுமே செய்வதால் இதற்கு நல்ல எண்ணை என்றார்கள். (இப்போது கடைகளில் வாங்கும் நல்லெண்ணைக்கு இது பொருந்தாது).

பலசரக்கு கடைகள்ள அல்லது எள் பயிர் செய்கிற விவசாயிகளிடமோ குறைந்தபட்சம் 20 கிலோ எள் வாங்கி, அதை தூசி இருந்தால் சுத்தப்படுத்தி, 2 நாள் வெயிலில் காய வைத்து விடுங்கள். இந்த அளவு எள்ளுக்கு ஒரு கிலோ கருப்பட்டி என எடுத்துக்கொண்டு, அதனை எண்ணை அரைக்கிற மில்லுக்கு கொண்டு செல்லுங்கள். எல்லா ஊர்களிலும் எண்ணை அரைக்கிற மில் இருக்கும். சில இடங்கள்ள அரிசி அரைக்கிற மில்லோட சேத்து வச்சிருப்பாங்க. அப்படி இல்லைன்னா உங்க ஊர் ரைஸ் மில் காரர்ட்ட கேட்டா அது எங்க இருக்குன்னு சொல்லிடுவாங்க. அப்படி ஒரு மில்ல தேர்ந்தேடுத்துக்கோங்க. அதுல கொண்டு போயி இந்த எள், கருப்பட்டியை கொடுத்து அரைத்து அதிலிருந்து கிடைக்கும் எண்ணையை வாங்கிக்கொள்ளுங்கள். இதற்கு அவர்கள் குறைந்த பட்ச கூலியே கேட்பார்கள்.

அரைத்து கிடைத்த எண்ணையை வீட்டிற்கு கொண்டு வந்து, ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி ஒரு சிறிய துண்டு கருப்பட்டியை அதனுடன் போட்டு சில்வர் பாத்திரத்தின் வாய் பகுதியை வெள்ளைத்துணியால் வேடு கட்டிக்கொள்ளுங்கள். அதை இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து விடுங்கள். மூன்றாம் நாள் நமக்குத்தேவையான சுத்தமான எண்ணை நன்றாக தெளிந்து இருக்கும். இப்போது அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு எள் வாங்கிக்கொண்டீர்களோ அதில் நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து சதவீதம் எண்ணை கிடைக்கும். அதாவது, 20 கிலோ எள்ளுக்கு 8 முதல் 9 கிலோ எண்ணை கிடைக்கும். இது நம் கண் முன்னாலே நாமளே தயாரித்த ஆரோக்கியமான எண்ணை. இதற்கென செலவும் அதிகம் கிடையாது. கிட்டத்தட்ட நீங்கள் வெளியில் வாங்கும் எண்ணையின் செலவுத்தொகையே இதற்கும் ஆகும். ஆனால் மருத்துவ செலவு மிச்சமாகும் என்பது உண்மை. இதை மாதம் ஒருமுறை வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் நாம் தயாரித்த இந்த நல்லெண்ணெய்.

இப்படி 'இரும்பு இயந்திரத்தில்' வைத்து எண்ணை அரைத்து எடுப்பது என்பது சிறப்பு. எண்ணையை ;கல் செக்கில்' வைத்து எடுப்பது என்பது மிக சிறப்பு. சில இடங்களில் 'மர செக்கு' இருக்கும். அதில் அரைத்து எடுப்பது என்பது மிக மிக சிறப்பு. ஏன் சொல்கிறேன் என்றால், இரும்பு இயந்திரத்தில் அரைத்து எடுக்கும் போது அதிக உஷ்ணத்தில் அரைக்கப்படும். கல் செக்கில் என்றால் அதை விட குறைவான உஷ்ணத்திலும் அதுவே மர செக்கில் எனும் போது மிக மிக குறைவான உஷ்ணத்திலும் அரைக்கப்படுகிறது. உஷ்ணம் அதிகமாக அதிகமாக எண்ணையில் இருக்கும் உயிர்ச்சத்துக்கள் குறைந்து போகும். கடைகளில் கிடைக்கும் எண்ணை, அதை தயாரிப்பவர்கள் பெரிய இயந்திரத்தில் வைத்து மிக மிக அதிக உஷ்ணத்தில் தயாரிக்கிறார்கள். எனவே, அதில் உயிர் சத்துக்கள் என்பது சுத்தமாக இருக்காது. மேலும் ரீபைண்டு என்ற பெயரில் அதில் உள்ள பிற சத்துக்களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள். நாம் அதை உபயோகபடுத்தினால் நமக்கு எந்த லாபமும் இருக்காதுதானே. ஆகவே இதை ஒப்பிடும் போது, நாம் தயாரித்த எண்ணை ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

மர செக்கு, கல் செக்கு, இயந்திர செக்கு
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், கடைகளில் எள் வாங்கும்போது எண்ணை தயாரிக்க என்று கேட்டு வாங்குங்கள். ஏனென்றால் சில எள் பொக்கு எள்ளாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட எள்ளை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். வாங்கிய எள்ளை கண்டிப்பாக வெயிலில் 2 நாட்கள் காயப்போட வேண்டும். எண்ணை எடுத்த பின்னரும் எண்ணையை 2 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட ஒருவரால் இது முடியவில்லை என்றால், அப்பகுதியில் இருக்கும் ஒருவர் தேவையான நபர்களுக்கு இதனை செய்து கொடுத்து சிறிதளவு வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். தயவு செய்து இதை ஒரு சேவையாக செய்யவும்.

சரி. இதை உபயோகப்படுத்துவதால் நமக்கு என்னென்ன பயன் என்று பார்க்கலாம்.
காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர், இருபத்தைந்து மில்லி எண்ணையை வாயில் ஊற்றி இருபது நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க வேண்டும். வாயில் இருக்கும் எண்ணையானது தனது வழுவழுப்பு தன்மை நீர்த்துப்போய், நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும். அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படி செய்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி சரி செய்யப்படும். இது ஒரு சர்வ ரோக நிவாரணி ஆகும். இதை ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் உபயோகிப்படுத்தி வந்தது. இப்போது ஆயில் புல்லிங் என்ற பெயரில் பிரபலமாகிக்கொண்டு வருகிறது.

வாரம் ஒருமுறை எண்ணையை தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய்கள் ஏற்படாது. தோல் மினுமினுப்புடன் இருக்கும். உடலில் உஷ்ணம் தணிந்து உள் உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.

எண்ணை தேய்த்து குளிக்கும் போது அதனுடன் சிறிதளவு வெங்காயம், சீரகம், ஐந்து மிளகு, சிறிதளவு நைத்த இஞ்சி துண்டு சேர்த்து சூடு படுத்தி ஆறிய பின்னர் உடல் முழுதும் நன்றாக தேய்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் புதுப்பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்கும். நம் முன்னோர்கள் இம்முறையை பயன்படுத்திதான் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருந்ததாக கூறுவார்கள்.

அதிகமான கால்சியம் சத்து இதில் உள்ளது என்பதால் கால்சிய சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் நேரிடையாக குடிப்பதால் அந்த குறைபாடு நீங்கும்.

பெண்களுக்கு கால்சிய சத்து குறைபாட்டினால் எலும்புகள் பலவீனமடையும். அவர்கள் தினமும் சிறிதளவு நேரிடையாக குடித்து வந்தால் இதெற்கென எந்த மருத்துவமும் தேவை இல்லை.

வளரும் இளம் குழந்தைகளுக்கு தினமும் சிறிதளவு நல்லெண்ணெயை குடிக்க கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு தன்மையுடன் வளர்வார்கள்.
சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் வர விடாது.

உடலில் வலி ஏற்பட்ட இடத்தினில் நல்லெண்ணையை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.

சிலருக்கு அதிக உஷ்ணத்தால் அடி வயிறு வலி, சிறு நீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப்பகுதியில் எண்ணையை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

இப்போது தெரிகிறதா, வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என்ற பழமொழியின் அர்த்தம். கொஞ்சம் மெனக்கெட்டு நம்ம ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள்ல கவனம் செலுத்தி,நாம மட்டும் இல்லாம நம்ம சந்ததிகளையும் ஆரோக்கியமாக வளர்ப்போம். மீண்டும் ஆரோக்கியமான இன்னொரு தயாரிப்பு முறையில் சந்திப்போம்.