Thursday, February 18, 2016

காயத்துக்கு (உடலுக்கு) ஏற்ற காய்கள் - இன்று முருங்கைக்காய்

காய்கறிகளின் அரசன் முருங்கைக்காய் என்று சொல்வதுண்டு. உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகமாக தன்னகத்தே கொண்டுள்ளதால் இதை அவ்வாறு கூறுவர். முருங்கை மரத்திற்கு 'பிரம்ம விருட்சம்' என்ற பெயர் மட்டுமல்லாது 'ஏழைகளின் மரப்பயிர்' போன்ற சிறப்புப் பெயர்களும் உள்ளது.

முருங்கை மரத்தின் இலைகள், காய்கள், பிஞ்சுகள், பூக்கள், பட்டைகள், முருங்கை கோந்து அனைத்திலும் பஞ்ச பூத சக்தி மிகுந்துள்ளதால் உடலில் ஏற்படும் பல பிணிகளை நீக்க வல்லது. மனிதர்களின் உன்னத மருத்துவ பொக்கிஷம் இந்த முருங்கை மரம்.

இதனுடைய பிஞ்சுக் காய்கள் மட்டுமே சமையலுக்கு உபயோகப் படுத்துகின்றோம். அதிக அளவு கலோரி சக்தியை கொண்டுள்ளதால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இதை உண்பதன் மூலம் பயனடையலாம்.

முருங்கை காய்களை சூப்பாக பயன்படுத்தலாம். துவையல் செய்து உட்கொள்ளலாம். முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் சாம்பார் போன்றவை தமிழர்களிடையே அதிகம் உபயோகிக்கும் உணவாக உள்ளது.

இரத்த விருத்திக்கும் தாது விருத்திக்கும் முருங்கை காய்கள் சிறந்தது. எலும்புருக்கி நோய் தீர்த்து வைக்கும். பெண்கள் இதை தொடர்ந்து உணவுடன் சேர்த்து வந்தால் அவர்களுக்கு எற்படக் கூடிய மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். காக்காய் வலிப்பு உள்ளவர்கள், பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதை தொடர்ந்து உணவோடு சேர்த்து கொள்ளலாம். விட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை அதிகம் சாப்பிட வேண்டும்.

சாதாரணமாக இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் முதுமையை இன்னும் சில காலங்கள் தள்ளிப்போடலாம் என்பது சித்தர்களின் கூற்று. இலை பூ பட்டை முதல் அனைத்திலும் சத்துக்கள் நிரம்ப உள்ளதால் வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து உணவோடு சேர்த்து ஆரோக்யமாக வாழ்வோம். 

Saturday, February 6, 2016

காயத்துக்கு (உடலுக்கு) ஏற்ற காய்கள் - இன்று தேங்காய்


தாழை, தெங்கு, மாதர்கனி, முக்கண்கனி, ரசகந்தம், சிரமபலம், இராசபலம், சுராகாரம், பானிவிருக்கம், தேங்கனி இவையெல்லாம் தேங்காயின் மற்ற பெயர்கள். தேங்காய் என்பது முழுதான ஊட்டமிகு உணவு. ரொம்ப பசியா இருக்குது, வீட்ல ஒன்னுமே இல்ல அப்படின்னா அந்த நேரத்துல கொஞ்சம் தேங்காய் எடுத்து அப்படியே சாப்பிட்டால் பசி இருந்த இடம் தெரியாம ஓடிரும். மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு என்னவென்றால் இது இந்த சீசனில்தான் கிடைக்கும் என்று இல்லை. எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.

 தேங்காய் சேர்க்காத சமையல் ருசிக்காது. அந்த அளவு சமையலில் முக்கியமானது இதன் பங்கு. ஆனால் இதை அதிக சூட்டில் வைத்து சமைக்கும்போது இதன் கொழுப்பு சத்தானது உடலுக்கு தீங்கு உண்டாக்கும் சத்தாக மாறிவிடுகிறது. அதனால் இதை சமையலில் இறுதியாக உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் இந்த தேங்காயை அம்மி அல்லது உரலில் இட்டு அரைத்து பயன்படுத்தும்போது அதன் உயிர் சத்து முழுமையாக நமக்கு கிடைக்கிறது. ஆனால் மிக்சியில் இட்டு அரைக்கும் போது அளவுக்கதிகமான சுழற்சியால் அதனுடைய உயிர்சத்துக்கள் அழிந்து விடுகிறது. உணவுப்பொருள்கள் விரைவில் கெட்டுப்போவதற்கு காரணமே இதனால்தான்.

சமைக்காத தேங்காய் பால் உணவு உடலுக்கு நன்மை தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி, இருமல் நீக்குகிறது. புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குடலில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்றுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. மழைக்காலங்களில் உடலுக்கு தேவையான வெப்ப சக்தியினை அளிக்கிறது. மற்றும் உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் மற்ற அசைவ உணவுகளை விட ஆற்றல் மிகுந்தது.

ஒரு மனிதன் ஒரு தேங்காயை அப்படியே சவைத்து சாப்பிடலாம். இது ஒரு நேர உணவுக்குண்டான ஆற்றலைத்தரும். இதனால் நமக்கு ஒரு வேளை உணவு தயாரிக்க செலவிடும் நேரம், எரிபொருள், பொருள் செலவு ஆகியவை மிச்சப்படுகிறது.

தேங்காயை துருவி பூ எடுத்து அதை அரைத்து பாலெடுத்து, அந்த பாலை கொஞ்சம் இனிப்பு சேர்த்து (வெள்ளை சர்க்கரை தவிர்க்கவும்) வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பி சப்பி சாப்பிடலாம். மடமடவென்று குடிக்கக்கூடாது.

இந்து கோவில்களில் தேங்காய் பழம் கொண்டு போய் பூஜை செய்துவிட்டு வந்து அதையே உணவாக சிலர் எடுத்துக்கொள்வதை பார்க்கலாம். இது ஒரு ஆரோக்யமான உணவு என்பதை அன்றைய தமிழர்கள் கற்றறிந்து அதை செயல்படுத்தி இருந்தார்கள். நாமளும் அதை தொடர்வோம். நலமாக வாழ்வோம்.

Friday, January 29, 2016

உணவுபொருட்களை நாமே தயார் செய்து கொள்வது எப்படி? இன்று தேங்காய் எண்ணெய் ...


காலைல எந்திச்சி குளிச்சதுல இருந்து இரவு வரைக்கும் நமக்கு நெறைய விசயங்கள்ல தேங்காய் எண்ணெய் உபயோகப்படுது. கடையில போயி பாக்கெட்ல இல்ல பிளாஸ்டிக் டப்பால இருக்குற எண்ணெய்தான் வாங்கி உபயோகப்படுத்துறோம். சரி. இப்படி நாம வாங்கி உபயோகிக்கற எண்ணெய் எல்லாம் தேங்காய் எண்ணையே கிடையாது. எப்படிங்கரீங்களா? சந்தைல தேங்காய் விலை ஏறும் போது தேங்காய் எண்ணெய் விலை எறனும்லா? ஆனா இங்க ஏறி இருக்காது. அப்போ எப்பதான் ஏறும்...? நல்லா கவனிங்க.... பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறும் போதுதான் இந்த தேங்காய் எண்ணெய் விலையும் ஏறி இருக்கும். பெட்ரோலிய பொருட்களுக்கும் கடைல வாங்குற தேங்காய் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்..? பெட்ரோலிய பொருட்களோட ஆக கழிவுதான் நாம உபயோகப்படுத்துற தேங்காய் எண்ணெய். அந்த கழிவைத்தான் நம்ம தலையில தேச்சிக்கிறோம். ஏன், நம்ம உணவுப்பொருட்கள்ள கூட அதத்தான் சேத்துக்கிறோம். சின்னக்குழந்தைகளுக்கு தேய்க்கிற பேபி ஹேர் ஆயில் கூட இந்த கழிவுதாங்க. சின்ன அதிர்ச்சியா கூட இது இருக்கும். ஆனால் இதுதாங்க 100% உண்மை. (பாட்டில் மற்றும் பாக்கெட்டில் எழுதி இருக்கும் ingredients பாருங்கள். அதில் மினரல் ஆயில் என்று இருக்கும். அதுதான் பெட்ரோலிய கழிவு. இதோடு வாசனை திரவியத்தையும் சேர்த்து இருப்பார்கள்).

இந்த எண்ணையை நாம உபயோகபடுத்துரதால நமக்கு என்னென்ன கெடுதி அப்படிங்கிறதையும் இப்ப நான் சொல்லிடுறேன். 
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.
முடி கொட்டும்.
முடி சீக்கிரம் வெள்ளையாகி போகும்.
தோல் வறண்டு போய்விடும்.
உணவோடு இதை சேர்த்துக்கொள்ளும்போது உடலுள் சென்று கெட்ட கொழுப்புகளாக மாறி உள்ளேயே தங்கிவிடும்.

அப்போ சுத்தமான தேங்காய் எண்ணெய் பெறுவது எப்படி? வெகுசில கடைகளிலே கிடைக்கும் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணையை வாங்கி பயன்படுத்தலாம். அதன் தரத்தினை உறுதி செய்துகொள்வது நல்லது. அப்படி இல்லை என்றால் நாமே எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி சொல்கிறேன். இம்முறையானது முன்னோர்கள் வீட்டினில் பயன்படுத்திய ஒன்றுதான். இந்த தலைமுறையினருக்கு அது மறைக்கப்பட்டு விட்டது. அதன் செய்முறையை பற்றி இப்போது சொல்கிறேன்.

வெள்ளோட்டமாக முதலில், ஒரு நூறு மில்லி அளவு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஒரு தேங்காய் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். அந்த காய் இளம் காயாகவும் இல்லாமலும், முற்றிலும் தண்ணீர் வற்றிய காயாகவும் இல்லாமலும் தேங்காய் பூ துருவி எடுக்கும் தன்மை உள்ள காயாக இருக்க வேண்டும். (சாதாரணமா சமையலுக்கு பயன்படுத்துகின்ற காய் போல்) இப்போது தேங்காயை துருவி பூ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பூவில் சிறிதளவு நீர் விட்டு கையால் நன்கு பிசைந்து பால் எடுக்கவும். அந்த பாலை வடிகட்டி, பின்பு மீண்டும் சிறிதளவு தண்ணீர் விட்டு கையால் பிசைந்து பால் எடுக்கவும். பூவில் இருந்து முழுவதும் பால் எடுக்கும் வரை இம்முறையினை மீண்டும் மீண்டும் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். (சிலர் வெந்நீர் விட்டு கலந்து பால் எடுப்பார்கள். அப்படி செய்ய வேண்டாம். மிக்சியில் அடித்து பால் எடுக்கவும் கூடாது. ஆனால் ஆட்டு உரலில் இட்டு அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம்). இப்படி எடுக்கப்பட்ட பாலை ஒரு காட்டன் துணியால் நன்றாக வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு இரவு அல்லது பதினைந்து மணி நேரமாவது மூடி வைத்து விடவும். குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மூடியை திறந்து பார்த்தால் தேங்காய் பாலானது பாலாடை கட்டி போல நீரில் மிதக்கும். அந்த பாலாடை கட்டியை ஒரு அகலமான கரண்டியால் வழித்து எடுக்கவும். மீதமான நீரை அப்புறப்படுத்தி விடவும்.

இப்போது ஒரு வாணலியில் இந்த பாலாடை கட்டியை ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். காஸ் அடுப்பு என்றால் 'சிம்'மில் வைத்து சூடேற்றவும். ஒரு கரண்டியால் பாலாடை கட்டியை லேசாக கிளறி விட்டுக்கொண்டே வரவும். நேரமாக நேரமாக பாலாடை கட்டியிலிருந்து எண்ணையானது வெளியேறும். இறுதியாக எண்ணெய் முழுதும் கட்டியிலிருந்து வெளியேறிய பின் கட்டியானது பழுப்பு நிறமாக மாறி அடியில் தங்கிவிடும். இந்த நிலையில் அடுப்பில் இருந்து வாணலியை கீழே இறக்கிக்கொள்ளுங்கள். இப்போது முகர்ந்து பார்த்தால் தேங்காய் வாசம் 'கும்'மென்று மணக்கும். சூடு ஆறிய பின்பு காட்டன் துணியால் வடிகட்டி பாட்டிலில் அடைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதன்முறையாக செய்யும்போது சில தவறுகள் நேரலாம். குறிப்பாக அதிக சூட்டினால் எண்ணெய் அடி பிடித்துக்கொண்டு லேசான கருகல் வாடை வரலாம். அப்படி இருந்தாலும் எண்ணையை பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்தடுத்து செய்யும் போது தவறுகளை சரி செய்து கொள்ளலாம். முதலில் ஒரு தேங்காய் வைத்து முயற்சித்து பார்த்தோம். பின்பு படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம். இப்படி தயாரித்த எண்ணையை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்பதையும் அடுத்ததாக பார்ப்போம்.

தலைக்கு தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால்
முடி உதிராது.
முடி உடைந்து போகாது.
முடி வறட்சி ஏற்படாது.
பேன், பொடுகு தொல்லை இருக்காது.
மயிர்க்கால்கள் ஆரோக்யமாகி நன்றாக வளரும்.
சீக்கிரம் வெள்ளை முடி (இள நரை) தோன்றாது.

குழந்தைகளுக்கு இந்த எண்ணையை உடலில் தேய்த்து வந்தால் தோல் மினுமினுப்புடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கும்.

குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவரும் தங்களது தோல் மினுமினுப்பு பெற இந்த தேங்காய் எண்ணையை உபயோகிக்கலாம்.

இந்த எண்ணையை சமையலுக்கு பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலும் நல்ல மனமுடன் இருக்கும்.

மனிதனுக்கு வரக்கூடிய நோய்களில் பெரும்பாலான நோய்கள் கடைகளில் விற்கும் செயற்கை முறையில் தயாரித்து விற்கப்படும் எண்ணெய்களால்தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

Tuesday, January 26, 2016

பலன் தரும் பழங்கள் - இன்று எலுமிச்சம் பழம்



எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சம்பழத்தினை மட்டும் எலிகள் கடிக்காது. (எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்திருக்கும் பழம் என்பதால் இதனை முன்னோர்கள்  எலிமிச்சம்பழம் என்றும் சொல்வதாக கூறுவார்கள்). எலுமிச்சம்பழம் எல்லாருக்கும் தெரிந்த பழம்தான். பொதுவாக இதை ஊறுகாய் இடுவதற்கும், சாறு பிழிந்து அருந்துவதற்கும், புதிதாக கார் வாங்கினால் டயருக்கு அடியில் வைப்பதற்கும் (திருஷ்டி கழியுமாம்..) என ஒரு சில வகையிலே மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். இதன் பயன் இவ்வளவுதான் என்றும் நமக்குள்ளே நாமே வரையறுத்துக்கொண்டு அதற்கு மேல் இதை உபயோகிப்பது கிடையாது. ஆனால் இதை தினசரி ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கு எடுத்துக்கொள்ளும் போது எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கிறது. இதனை 'தேவ கனி'அல்லது 'ராஜ கனி' என்று முன்னோர்கள் கூறியதன் ரகசியம் இப்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே. எனக்குத்தெரிந்த வேறு சில பயன்களையும் உங்களுடன் இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த எலுமிச்சம்பழத்தின் பலன்களை இரண்டு வகையாக எடுத்துக்கொள்வோம். அதாவது உடலுக்கு உள்ளே எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்? உடலுக்கு வெளியே சேர்த்துக்கொள்வதால் என்ன பலன்கள்? என்றும் பார்க்கலாம். முதலில் உடலுக்கு உள்ளே உட்கொள்வதால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

எழுமிச்சம்பழத்தின் சாரானது மிகவும் புளிப்புத்தன்மை கொண்டதனால்  (5% சிட்ரிக் ஆசிட் அதனுள் இருப்பதால்) நேரிடையாக நம்மால் சேர்த்துக்கொள்ள முடியாது. இதில் நீர் மற்றும் இனிப்பு சேர்த்துதான் ஜூஸாக சாப்பிட முடியும். இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. அதே போல் ஐஸ் கட்டியோ, ஐஸ் தண்ணீரோ சேர்க்கக்கூடாது. ஆனால் நம்ம மக்கள் அனைவரும் குளிர்ச்சியான ஜூஸ் குடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்றால்  மண்பானை நீர் சேர்த்துக்கொள்ளலாம். அந்த குளிர்ச்சியே போதுமானது. இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்தே பழகிவிட்டோம். கூடுமான வரை அதை தவிர்த்துவிட்டு, பனை வெல்லம் அல்லது அச்சுவெல்லம் அல்லது உருண்டைவெல்லம் அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமும் கண்டிப்பாக இந்த ஜூஸ் பருகுவது என்பது மிகசிறந்தது. ஏனெனில், இதை உமிழ் நீருடன் சேர்த்து பருகும்போது இந்த கலவை வயிற்றுனுள் சென்று ஜீரண நீர்களுடன் விரைவில் கலக்கிறது. அங்கு செரிமானம் ஆகி திரவ நிலையை அடைந்து குடலால் உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்கு சென்று அங்கு சில இரசாயன மாற்றமடைந்து இரத்தத்துடன் கலந்து இருதயத்திற்கு செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் மூலம் உடல் முழுவதும் சென்றடைகிறது. பின்பு நுரையீரலுக்கும் சென்று மீண்டும் சுற்றி இறுதியாக சிறுநீரகத்திற்கும் தோல் பகுதிகளுக்கும் செல்கிறது. மறுநாள் இது உமிழ் நீராகவும் ஜீரண நீராகவும் மாறுகிறது.

என்னடா, ஜூஸ் குடிச்சோமா, சிறுநீரா அது வெளிய போச்சான்னு இல்லாம இது ஏன் இவ்வளவு சுத்து சுத்துதுன்னு உங்களுக்கு தோணலாம். ஏன் அது சுத்துரத பத்தி இப்படி படிக்கும்போதே உங்களுக்கு தலை சுத்தும்னு நெனைக்கிறேன். விடுங்க. கொஞ்சம் அதப்பத்தியும் தெரிஞ்சிக்குவோம். இவ்வாறு ஒவ்வொருபகுதிகளுக்கும் செல்வதால் ஏற்படும் பயன்களையும் தெரிஞ்சிக்கோங்க.

வாய், தொண்டை, உணவுக்குழாய், குடல், வயிறு ஆகியவற்றை நமக்கு தெரியாமலே எழுமிச்சம்பழமானது சுத்தப்படுத்துகிறது. உடலில் மிகப்பெரிய இரசாயன கூடமான கல்லீரலையும் சுத்தபடுத்துவதோடு கல்லீரலுக்கு தேவையான பல அமிலங்களையும் போகிறபோக்கில் கொடுத்துவிட்டு செல்கிறது. இதயத்திற்கு தெம்பு கிடைக்கிறது. இரத்தத்தின் கெட்டித்தன்மையைக் குறைத்து இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்துவிட்டு வேறு எதாவது தடைகள் இருந்தாலும்கூட அதையும் கரைத்துவிட்டு வெளியேற்றிவிடுகிறது. இதனால், உடம்பில் உள்ள அனைத்து இரத்த நாளங்களிலும் இரத்த ஓட்டமானது தங்கு தடையில்லாமல் செல்ல உதவுகிறது. அப்படி ஓட்டம் சீரானால் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்புடனும் நோய் எதிர்ப்புத்தன்மையுடனும் செயல்படுகிறது.

இத்தோடு முடியவில்லை நீங்கள் குடித்த அந்த எலுமிச்சம்பழத்தின் சாற்றின் நன்மைகள். இது அடுத்ததாக நுரையீரலுக்கு செல்கிறது. அங்கு காற்று சிற்றறைக்குள் பசை போல சிக்கி இருக்கும் சளியினை கரைத்து வெளியேற்றுகிறது. இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். ஜூஸ் குடிச்சேன். சளி புடிச்சிடுச்சி அப்படின்னுதான கேள்விபட்டுருக்கோம். இப்படி சொல்றீங்களேன்னு கேக்க தோணும். இது உண்மை இல்லை. நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் நிகழ்வைத்தான் சளி பிடித்துக்கொள்கிறது என்று தவறாக உணரப்பட்டுக்கொண்டு வருகிறது. (அதை வெளியே செல்ல அனுமதியுங்கள். மாத்திரை மருந்துகள் போட்டு தடுக்காதீர்கள். அது பக்க விளைவுகளைத்தான் உண்டாக்கிவிடும்).

அடுத்தபடியாக சிறுநீரகம் சென்று சிறுநீரை நன்றாக வடிகட்ட உதவி செய்தும் கற்கள் இருந்தாலும் அதனை உடைத்து வெளியேற்றவும் உதவுகிறது.

அடுத்த வேலையாக தோல் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள கொழுப்புகளையும் கரைத்து வியர்வை துளைகளை விரிவடையச் செய்து வியர்வையை விரைவாக வெளியே தள்ளுகிறது.

ஆக உடம்பில் உள்ள தேவையற்ற அனைத்து கழிவுகளையும் வெளியே தள்ளுவதில் எலுமிச்சை சாறு முதலிடம் வகிக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம், இதில் அமிலத்தன்மை இருக்கும் காரணத்தால் அல்சர், குடல் புண்கள், ருமேட்டிசம், ஆர்த்தரைட்டீஸ் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மிக குறைவான அளவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் ஏற்படும்  கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்புரை நோய் ஏற்படுவது குறைகிறது.

எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு நீரும் சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ஏற்படாது. வாய்ப்புண் ஏற்படாது,

அசைவ உணவு உட்கொள்பவர்கள் உணவுடன் சிறிதளவு சாறு பிழிந்து கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். பொதுவாக எண்ணெய் பலகாரங்கள் உண்ணும் போதும் சிறிது சாறு சேர்த்துக்கொண்டால் செரிமானம் சிறப்பாகும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வருவது மிக மிக சிறந்தது. அல்லது உணவுக்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உணவு உண்டு சிறிது நேரம் கழித்தோ சாற்றினைப் பருகுவது மேற்கண்ட பலன்களை கொடுக்கும்.(பருகும் போது மடமடவென்று குடிக்காமல் சப்பி சப்பி உமிழ் நீருடன் கலக்கச்செய்து குடிக்க வேண்டும்).

சரி. உடலுக்கு வெளியே சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும் இப்போது பார்ப்போம். பொடுகு தொல்லை இருப்பவர்கள் வாரம் ஒருமுறை சாற்றினை நேரிடையாக தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை என்பது இருக்காது. பொடுகு தொல்லை இல்லாதவர்களும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இப்படி தேய்த்து குளித்து வந்தால் அழுக்குகள் சேராது, பேன் தொல்லைகள் இருக்காது. முடி சுத்தமாகும். (ஷாம்பூ பயன்படுத்த தேவை இல்லை. ஷாம்பூவினால் ஏற்படும் முடி உதிர்வுகள் கூட எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வருவதால் மட்டுப்படும்).

சாற்றினை நீரில் கலந்து முகம் கழுவினால் கரும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும். முகம் தெளிவடையும்.

சருமத்தில் புண்கள், சொறி சிரங்குகள் இருப்பின் இச்சாற்றினை நீரில் கலந்து கழுவி வர புண்கள் குணமடைந்து தோல்கள் மிருதுவாகும்.

தேள் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டினால் அவ்விடத்தில் பழத்தை இரண்டாக நறுக்கி அந்த இடத்தில் தேய்த்து வர விஷ முறிவு ஏற்படும்.

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி கிராம்புகள் சிலவற்றை அந்த எலுமிச்சை துண்டில் சொருகி கொசு வரும் இடங்களில் வைத்து விடுங்கள். கொசு தொல்லை என்பது கிடையவே கிடையாது. தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் கொசுவிரட்டிகளுக்கு குட்பை சொல்லிவிடுங்கள்.

பயணத்தின் போது ஏற்படும் குமட்டலை தடுக்க இப்பழத்தினை லேசாக கிள்ளிவிட்டு அதன் வாசத்தினை முகர்ந்துகொள்ள குமட்டல் அடங்கும்.

எலுமிச்சை சாற்றுடன் சிறிது தண்ணீரும் கலந்து வீட்டின் தரை மற்றும் குளியலறை கழிப்பறைகளின் தரைகளை துடைத்துக்கொள்ளலாம். சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இவ்வளவு பயன் தரும் எலுமிச்சையை தேவ கனி என்று சொல்வது மிகப்பொருத்தமே.